Monday, August 17, 2015

பொங்கிடுமே இன்பம்

இன்பம் பொங்கிடுமே இசையினால் எங்குமே பேர்
இன்பம் பொங்கிடுமே பேர் இன்பம் பொங்கி பெருகிடுமே
அதிகாலை கோழிகள் கூவுவதும் ஓர் இன் இசையே
அந்த செடிகள் தென்றலில்அசைந்தாடும் ஒலியும் இசையே
அங்கோர் குருவி கொத்தும் ஓசையில் உள்ளதும் இசையே
அந்த காக்கைகள் கூடி உண்ணும் சத்தமும் இசையே ( இன்பம்                                                  சின்னக்குழந்தை தன் மழலை மொழியால்பேசுவது ஓர்இசையே  
சின்னங்சிறு வண்டுகள் அங்கு ரீங்காரமிடுவதும் இசையே.
வனத்தில் மிருகங்கள்  உருமுவதும் ஓர் இன் இசையே
வானத்தில்மேகங்கள் மழையாய் பொழிவதும் இசையே( இன்பம்)

எங்கும் பரந்திருக்கும் கடலின் அலை ஓசையும் இசையே
எங்கு தட்டினாலும் உண்டாகும் நாதமும் ஓர் இசையே
எண்ணற்ற மொழிகளில் நாம் பேசுவதும் இனிய இசையே
எண்ணிலடங்கா இன்பம் தருவதும் என்றும் அந்த இசையே
இன்பம் பொங்கிடுமே இசையினால் எங்குமே பேர்
இன்பம் பொங்கிடுமே பேர் இன்பம் பொங்கி பெருகிடுமே
இயற்கை நமக்களித்த ஒலிகளிலெல்லாம் இருப்பதும் இசையே
இன்ப இசையே பேரின்ப இசையே என்றுமே பேரின்ப இசையே
என்றுமே பேரின்ப இசையே என்றுமே பேரின்ப இசையே.

த்ரேதாயுக ஸீதையும் கலியுக கோதையும்

திரேதாயுகத்தில் விதேக நாட்டு மிதிலை நகரில் ஜனக மன்னன் யாகசாலை அமைப்பதற்கு கலப்பையால் பூமியில்  உழுகையில் அங்கு பூமிதேவியின் அம்சமாக ஓரு பெண் குழந்தை தோன்ற அக்குழந்தைக்கு சீதை என்று பெயரிட்டு  ஜனகர் தன் புத்ரியாக ஏற்று கொண்டு நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்த்து வந்தார். அந்த சீதையை அயோத்தி மன்னன் தசரதரின் குமாரன், ஶ்ரீமந்நாராயணனின் ஒரு அவதாரமான ஶ்ரீராமனுக்கு மணமுடித்தார் ஜனகர். சீதையும் ஶ்ரீராமனுக்கு ஏற்ற துணைவியாய் இருந்து வந்தாள். 

     ஒரு சமயம் ஶ்ரீராமனுக்கு காட்டிற்கு போகவேண்டிய நிற்பந்தம் வந்ததால் சீதையும் அவருடன் சென்றாள். அங்கு அவள் பலவகையான இன்னல்களுக்கு ஆளாகி மிகவும் கஷ்டப்பட நேர்ந்தது. ஜனக புத்ரி ஜானகியும் மிகப்பொறுமையாகஇருந்து எல்லாவற்றையும் சமாளித்தாள். பூமிதேவி அந்த அவதாரத்தை நிறைவு செய்யும் தருணம் ஶ்ரீராமரிடம் உங்களின் இந்த அவதாரத்தில் நான் நிறைய இன்னல்களை அனுபவித்து விட்டேன், எனது அடுத்த பிறவியில் நான் உங்களை பிரியாமல் என்றும் உங்களுடன் இருக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டாள்.
     
   சுமார் ஆயிரத்து ஐனூரு வருடங்களுக்குமுன், கலியுகத்தில்,  ஶ்ரீவில்லிப்புத்தூர் என்ற நகரில் விஷ்ணுசித்தர் என்ற அந்தபெரியாழ்வார், தன் நந்தவனத்திலிருந்து அன்றலர்ந்த
மலர்களையும், துளசி இலைகளையும் பறித்து,  மாலைகளாகத் தன் கையினாலேயே தொடுத்து திருமால்
வடபத்திரசாயிக்கு தினம்தோறும் ணிவித்து மிக்கமகிழ்ச்சி அடைந்தார்.
      ஒருநாள் காலை அவர் வனத்திற்கு சென்று மலர் கொய்யும் பொழுது ஒளி வெள்ளமாய் தெய்வீக மணம் கமழும் ஒரு பெண் குழந்தையை துளசி செடியின் கீழ்கண்டு மெய்மறந்து சில நிமிடங்கள் நின்றார். துளசி மாலுக்கு உறியது அன்றோ, இக்குழந்தையை அடைய நான் என்ன பாக்கியம் செய்தேனோ என்று புளகாங்கிதம் அடைந்தார். அவர் அன்றாடம் சென்று வழிபட்டு வரும் வடபத்ரசாயிதான் இக்குழந்தையை தனக்கு அளித்திருக்கிறார் என்று எண்ணி மகிழ்ந்தார். நள வருடம் ஆடிமாதம் செவ்வாய்கிழமை பூரநட்ஷத்திரத்தில் பூதேவியின் அம்சமாக பிறந்த குழந்தைக்கு கோதை என்று பெயரிட்டு அருமை பெருமையுடன் நாளும் சீராட்டி வளர்த்து வந்தார். தந்தையிடம் கோதை கண்ணபிரானின் திருவிளையாடல்கள் பற்றியும், கோகுலத்தில் ஆய்ச்சிகளுடன் அவன் கலந்துறவாடிய பல செய்திகளையும் கேள்வியுற்று தானும் அந்த இடைப்பெண்கள் போலப் பேறுபெற ஆசைப்பட்டாள். தந்தையே கண்டு வியக்கும்படி இளமையிலேயே எம்பெருமான் வடபத்ரசாயியிடம் பக்தி கொண்டு அவரின் பெருமைகளைப்பற்றியே எக்கணமும் சிந்திப்பது, துதிப்பது, அவரையே சதாசர்வகாலமும் நினைத்து பாடுவது, என்று தன்முழுநேரத்தையும் அவரைப்பற்றிய நினைவிலேயே கழித்துவந்தாள் கோதை.
     எம்பெருமானின் பெருமைகளையே எப்பொழுதும் நினைத்துத் அவனுக்கே மாலையிட்டு மணம் செய்து கொள்ளக் கருதினாள். பெரியாழ்வார் வடபத்திரசாயிக்காக கட்டி வைத்த மாலையை அவர் இல்லாத சமயம், தான் அணிந்து கொண்டு கண்ணாடிமுன் அழகு பார்த்துவிட்டு ,மறுபடியும் அதை நலுங்காமல் பூக்கூடையில் வைத்து விடுவாள். இதுபற்றி தெரியாத ஆழ்வார் அம்மாலையைக் கொண்டு போய் கோயில்பெருமானுக்கு சாத்திவர  திருமாலும் மிகவும் விருப்பமுடன் அதை ஏற்றுக்கொண்டார்.
     ஒருநாள் வழக்கம் போல் குடலையிலிருந்து பூமாலையை எடுத்து ஆண்டாள் சூடியவாறு அழகு பார்க்கும் நேரத்தில், பெரியாழ்வார் திடீரென்று  வரவும் இதனைப்பார்த்தார். கோதையிடம் கோபம் கொண்டவர் இறைவனின் பூமாலையைச் சூடுவது அபச்சாரம் என்றுகூறி அன்றைக்கு அப்பூமாலைகளை கோவிலுக்கு எடுத்து செல்ல விருப்பப்படவில்லை. தன்னால் அன்று இறைவனுக்கு மாலைசாற்ற முடியவில்லையே என்று மனம் வருந்தினார். அன்றிரவு ஆழ்வார் கனவில்  வடபத்ரசாயி தோன்றி அன்று தனக்கு மாலை சூட்டாத காரணம் கேட்கவும், தன்மகள் செய்த தவறை கூறி மன்னிப்பு கேட்டார். ஆனால் இறைவனோ உம் மகள் சூடிக்கொடுத்த மாலையே தனக்கு உகந்தது. அதுவே நறுமணமிக்கது. அதையே தனக்கு சாற்றும்படி கூறி மறைந்தார். திடுக்கிட்டு கண் விழித்த பெரியாழ்வார், தன்மகளின் அரிய பாக்கியத்தை எண்ணி வியந்து அவள் பிராட்டியின் அம்சமாகத்தான் இருக்க வேண்டும் என்று எண்ணினார்.
     மணப்பருவம் அடைந்த கோதை அழகும், அறிவும், நற்பண்பும், இறை பக்தியும், உடன் வளர்ந்து வரப்பெற்றாள். தனக்கு ஏற்றவன் அந்த கடல்நிறவண்ணனான கண்ணன்தான், இனி அவனை ஒரு பொழுதும் தன்னால் மறக்க முடியாது என்பதை உணர்ந்தாள். பெரியாழ்வார் கோதைக்கு மணம் செய்வது பற்றி அவளிடம் கேட்க சூடிக்கொடுத்த சுடர்கொடியோ தான் அந்த கண்ண பெருமாளுக்கே உறியவள் என்றாள். பெரியாழ்வாரோ செய்வதறியாது திகைத்து நின்றார். 
     கோதையின் வேண்டுகோளின்படிபெரியாழ்வார்108 திருப்பதி களில் உள்ள பெருமாள்களின் வைபவங்களை அவளுக்கு எடுத்துக்கூறினார். வடமதுரைக் கண்ணன் ,வரலாறு கேட்டதும் மெய் சிலிர்ப்பும் திருவேங்கட முடையானை க்கூறியதும் முகமலர்ச்சியும் அடைந்தாள். சோலைமலைஅழகரின் வடிவழகில் ஈடுபட்டாள். திருவரங்கன்மகிமையை க்கேட்டுப்பேரானந்தம் அடைந்தாள். திரு அரங்கனானகண்ணன் மேல்தான் வைத்த அன்பு அதிகமாகி அவள் தன்னையே இடைச்சியாக கருதி நோன்பு நூற்கத்தொடங்கினாள். அதுவே, திருப்பாவை என்னும் பிரபந்தமாயிற்று. கண்ணனை அடைய விரும்பி மேகங்கள், குயில், ஆகியவற்றைதூதுவிடுத்து, தன்தாபங்களை வெளியிட்டாள். அவளின் தெய்வீகப்பாடல்களே நாச்சியார் திருமொழி என்ற பிரபந்தமாக ஆயிற்று.
     பெரியாழ்வாரின் கனவில் மீண்டும் அரங்கன் தோன்றி கோதையை திருவரங்கத்தில் இருக்கும் தன் கோவிலுக்கு அழைத்து வரும்படியும், அவளை தான் ஏற்பேன் என்றும் கூறினார். கோதையும் தான் அன்றிரவு பலவகை கனவு கண்டதாக தோழிகளிடம் கூறினாள். அந்தக்கனவில் தன் திருமணத்தைப் பற்றியும், முறையே கண்டதாக பத்து பாடல்களில் அவள் பாடியுள்ளார். அவற்றில்சிலவற்றை இங்கே காண்போம்:

வாரணம் ஆயிரம் சூழ வலம் வந்து நாரணன் நம்பி நடக்கின்றான் என் எதிர் 
பூரண பொற்குடம் வைத்து புறமெங்கும் தோரணம் நாட்ட கனா கண்டேன் தோழிநான் 

மத்தளம் கொட்ட வரி சங்கம் நின்றூத முத்துடை தாமம் நிறைதாழ்ந்த பந்தற்கீழ் 
மைத்துணன்நம்பி மதுசூதன்ன் வந்தென்னை கைத்தலம்பற்ற கணாகண்டேன் தோழி நான்

      அதே சமயம், திருவரங்க அர்சகரும் தான்கண்ட கனவினைதன் கனவு நீங்கி துயில் எழப்பெற்று நினைத்து ஆச்சர்யம் அடைந்து  அதை மற்றவர்களிடமும் கூறினார். திருவரங்கத்தில் எல்லோரும் கூடி
ஒரு மனதாக ஶ்ரீவல்லிப்புத்தூர் சென்று சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாம் அந்த கோதை நாச்சியாரையும் விஷ்ணுசித்தர் என்கிற பெரியாழ்வரையும், தக்க மரியாதையுடன் திருவரங்கத்திற்கு அழைத்து வரவேண்டும் எனத்தீர்மானித்தார்கள். பெரியாழ்வாருக்கும், அவர்கள் வரும் செய்தியை ஓர் மடலில் எழுதி முன்பே அனுப்பினர்.
         திருமகள் கோதையோஇச் செய்தியை க்கேட்டு, அளவற்ற உற்சாகம்  அடைந்து சிறந்த அணிகலன்களை அணிந்துகொண்டு, நீலமேகனான மாலனுக்குப் பிடித்த நீல நிறத்திலான உயர்ந்த பட்டாடையை உடுத்தி தன்னை அலங்கரித்துக் கொண்டு இடது  பக்கத்தில் கொண்டைகட்டி அதில் கண்ணனுக்குப்பிடித்த மலர்களைச்சுற்றிக்கொண்டு தன் முகத்தை கன்னாடியில் பார்த்து, வெட்கித்து, தன்னை அழைத்துச்செல்ல அவர்கள் எப்பொழுது வருவார்கள் எனக்காத்திருந்தாள்.
      திருவரங்கத்திலிருந்து அர்சகரும் மற்றவர்களும் முத்துப்பல்லக்கு, வண்ணக்குடை, வாத்தியங்கள், பலபட்டாடைகள், அணிகலன்கள், தாம்பூலம், பழவகைகள், இன்னும் பலவாசனை திரவியங்கள் சகிதம் அடியார்கள்புடை சூழ ஶ்ரீவில்லிப்புத்தூருக்கு வந்து பெரியாழ்வாரையும் திருமகள் கோதையையும் திருவரங்கத்திற்கு அழைத்து சென்றனர். கோதாய் நீ சூடிக்கொடுத்த மாலையை எம்பெருமான் அணிந்து எத்தனை ஆனந்தமுடன் தரிசனமளிக்கிறார், அவரை வசீகரிக்க இது ஒன்றே போதுமானது அன்றோ! ஆனால் நீயோ பாமாலையாலும் அவரைத்தொழுது ஶ்ரீரங்கனாதரின் கிருபைக்கு பாத்திரமாகி விட்டாய் - என்னே உன் பக்தி! என்று புளகாங்கிதம் அடைந்தார், பெரியாழ்வார். அங்கு அரங்கனை கண்ட கோதை அவரின் அழகில் மயங்கி சேவிக்கையில் அரங்கனின் அழகு இரும்பை காந்தம் இழுப்பதுபோல் கோதையை இழுக்க அரங்கனின் நாகணையின் மீது மெதுவாக அடிவைத்து அன்னமென நடந்து ஆனந்தமாய் அரங்கனுடன் ஐக்கியமாகி அவரைஆட்கொண்டு  ஆண்டாள் எனப் பெயரும் பெற்றாள்.
      மத்தள மேளங்கள் துந்துபி போன்ற அனைத்து வாத்தியங்களும் வானைப்பிளந்தது. வாழ்க கோதை நாச்சியார்! வாழ்க அரங்கனை ஆட்கொண்ட ஆண்டாள்! போன்ற பல கரகோஷங்கள் வாத்தியங்களுடன் இணைந்து  ரீங்காரமிட்டது. திருவரங்கனும் பெரியாழ்வாரை நோக்கி, ஜனகரைப்போல் நீரும் எனக்கு மாமனார் ஆனீர் என்று அருளினார். பூமிதேவியின் வேண்டுதலுக்கு செவிசாய்த்து கலியுகத்தில் ஶ்ரீமன் நாராயணன் ஶ்ரீரங்கனதராய் தோன்ற  பூமாதேவியை கோதையாகப் பிறவி எடுக்க வைத்து தன்னை ஆட்கொள்ள வைத்தார் அரங்கன்.
      நாமும் சூடிக்கொடுத்த சுடர்கொடியாம் கோதை நாச்சியாரை வேண்டி வணங்கி அவர் நமக்களித்த பொக்கிஷமாம் திருப்பாவை, மற்றும் நாச்சியார் திருமொழி, ஆகிய இனிய பாசுரங்களை கற்றுத்தேர்ந்து அவரின் கருணையையும், கடைக்கண் பார்வையையும் பெற்று சகல சௌபாக்கியங்களையும் அடைவோம். 
வளர்க நம் இறை பக்தி!

வாழி திரு நாமம்
திருவாடிப்பூரத்துச் செகத்துதித்தாள்  வாழியே!
திருப்பாவை முப்பதும்  செப்பினாள் வாழியே!
பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே!  
பெரும்பூதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே!
ஒருநூற்று நாற்பத்து  மூன்றுரைத்தாள் வாழியே!
உயர் அரங்கர்க்கே கண்ணி உகந்தளித்தாள் வாழியே!
மருவாரும் திருமல்லி வளநாடு வாழியே!
வண்புதுவை நகர்க்கோதை மலர் பதங்கள் வாழியே!
   
  1. ஆண்டாள் அருளிய திருப்பாவை வேதமனைத்துக்கும் வித்தாகும்.
  2. மார்கழிமாதம் திருப்பாவையினாலே பெருமை பெற்றது.
  3. கண்ணன் சொன்னது பகவத்கீதை, கோதை சொன்னது பகவதீ கீதை எனப்புகழ் பெற்றது.
  4. ஆண்டாள் அருளிய நாச்சியார் திருமொழியில் உள்ள 10 பாடல்களையும் கன்னியர்கள் தினமும் பக்தியுடன் பாடினால் விரைவில் அவர்களுக்கு திருமணம் கைகூடும்.
  5. ஆண்டாளைக்குறித்த சுவாமி வேதாந்த தேசிகரின் கோதாஸ்துதியில் 29 பாடல்களே உள்ளன. ஆண்டாளின் திருப்பாவை பாசுரங்கள் 30 க்கு இணையாக அமையக்கூடாது என்பதாலேயே இப்படி அவர் இயற்றினார்.

விஷமக் கண்ணன்

பொல்லாத கண்ணனாம் அவன் புவனமாளும் மன்னனாம்
இல்லாத வம்புகள் செய்தபின் ஓடி ஒளிவதிலே மன்னனாம்
விளையாட்டு பிள்ளையாம் கண்ணன் விஷமக்காரனாம் இன்னும்
வேடிக்கைகள் பல செய்திடும் நீலமுகில் வண்ணனாம் ஓயாமல்
கன்னியர்களை அழவைத்தே ரஸிப்பவனாம் அவன்,அன்னை வருமுன்
கன்றை கட்டவிழ்த்து  கைக்கொட்டி சிரிப்பவனாம் (பொல்லாத)
ஆடி ஆடி வந்திடுவான் ஒன்றும் அறியாதவன் போல் நின்றிடுவான்
தாடி வைத்த ஒருவன் வந்து தன்னை மிரட்டுகிறான் என்றிடுவான்
வாடா என்கண்ணே ஒன்றும் பயம்இல்லை யென்றழைத்தால் வந்து
ஒரு நொடியில் தள்ளி விட்டு ஓடி சென்று மறைந்திடுவான் ( பொல்லாத)
எங்கெல்லாமோ சுற்றிவிட்டு ஓடி வந்து உட்கார்ந்து கொள்வான்
என்னடா எங்குசென்றாய் ஏன் இப்படி ஓடி வருகிறாய் என்றால்
தண்ணீர் வேண்டும்என்று கேட்பான் தண்ணீர் எடுக்க உள்ளேசென்றால்
கதவைதாழ்ப்பாள் போட்டுவிட்டு திறக்கமாட்டேன் என்று சொல்வான்
பொல்லாத கண்ணனாம் அவன் புவனமாளும் மன்னனாம்
இல்லாத வம்புகள் செய்தபின் ஓடி ஒளிவதிலும் மன்னனாம்








Friday, August 14, 2015

கோதையின் கனவு

நீலநிற பாலகன் ஒருவன் என், நித்திரையில் வந்து மாயம் செய்கிறான்.                    
கேளடி தோழி நான் சொல்வதை, அந்த பாலகன் யார் என்று கூறிடு நீ  
                          
ஆலின் இலையில்உறங்கியவனாம், அவனுக்கு அன்னைகள் இருவர்களாம்
ஆயர்பாடியில் வளர்ந்தவனாம், அரக்கியின் உயிரையே மாய்த்தவனாம்
மண்ணை உண்ட மாயவனாம் ,உறி வெண்ணெயும் திருடிய கள்வனாம்.                                   கோலமயில் சிறகணிந்தவனாம் ,குழல் ஊதி மயக்கும் சியாமளனாம்                        

நீலநிற பாலகன் ஒருவன் என்,நித்திரையில் வந்து மாயம் செய்கிறான்.                      
கேளடி தோழி நான் சொல்வதை , அந்த பாலகன் யார் என்று கூறிடு நீ.
                       
மலைதூக்கிஆயர்களை காத்தவனாம்,காளிங்கன்மேல் நடனம் ஆடியவனாம்
தாயினால் உரலில் கட்டுண்டவனாம்,ஆனிரைகளையும் மேய்த்தவனாம்
கன்னியர்உடைகளை ஒளித்துவைத்தே , களிப்புடன்கைகொட்டிசிரித்தவனாம்                      அசுரன்கள்பலரையும் கொன்றவனாம்,யானைக்கும் திருவருள் புரிந்தவனாம்                        

நீலநிற பாலகன் ஒருவன் என்,நித்திரையில் வந்து மாயம் செய்கிறான்.                                           கேளடி தோழி நான் சொல்வதை , அந்த பாலகன் யார் என்று கூறிடு நீ    
             
பாண்டவர்க்கு தோழனாம் அவன், பார்புகழ் கீதையின் நாயகனுமாம்.                          
சேவைகள் பலவும் புரிந்தவனாம், அவன் சாரதியாயும் இருந்தவனாம்.                                                                                நூற்றியெட்டு திருப்பதிஅவனுக்குண்டாம், அரங்கம்தான் அதில் முதலாவதாம்
அலங்காரப் பிரியனான அவனுக்கு ஆயிரம் நாமங்கள் உள்ளனவாம்

நீலநிற பாலகன் ஒருவன் என்,நித்திரையில் வந்து மாயம் செய்கிறான்.
கேளடி தோழீ நான் சொல்வதை , அந்த பாலகன் யார் என்று கூறிடு நீ.                                              

அறிந்து கொண்டேன் தோழி நான் அவனை,மாயங்கள் புரியும் மன்னவனை.                      பார்க்கடலில் பள்ளிகொண்ட பரந்தாமன், அவன் தான் நீ சொல்லும் நாராயணன்
நாராயணா, ஹரி நாராயணா, ஶ்ரீமந் நாராயணா, லக்ஷ்மி நாராயணா,
பாஹி நாராயணா, ஜபோ நாராயணா, பஜோ நாராயணா, சத்ய நாராயணா.

Monday, August 11, 2014

பதவி உயர்வு

சேகர் மனம் குன்றி ஏமாற்றத்துடன் சோர்ந்து போய்  ஆபீஸிலிருந்து வீடு வந்து சேர்ந்தான்.அவன் மனைவி ஏன் இப்படி சோர்ந்து போய் இருக்கிறீர்கள்,தலைவலியா என்று கேட்டதற்கு ஒன்றுமே பதில் சொல்லாமல் மாடியேறி தன் அறைக்குள் சென்று கதவைத் தாளிட்டுகொண்டு அன்று அலுவலகத்தில் நடந்ததை நினைத்துப்பார்த்தான்.

       ஒவ்வொரு வருடமும் அவனுக்குத்தான் நன்றாக வேலை செய்ததற்கான சான்றிதழ் கிடைக்கும்.இந்த வருடமும் நிச்சயமாக தனக்குத்தான் கிடைக்கும், என்று மிக ஆவலுடன்
எதிர் பார்த்தான். ஆனால் அவனின் சக ஊழியன் ஶ்ரீதருக்கு இந்த வருடம் நல்ல உழைப்பின் சான்றிதழ் கிடைத்தது தான் அவனுடைய ஏமாற்றத்திற்கான காரணம்.
       சிறிது நேரம் யோஜனையில் ஆழ்ந்தவன்,பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தன்னை சமாளித்துக்கொண்டு,நாளை போய் மேனேஜரிடமே கேட்டு விடுவது என்று நினைத்துக்
கொண்டு எழுந்து முகம்,கை,கால் அலம்பிக்கொண்டு கீழே வந்தான்.
         அவன் வருவதற்கு காத்திருந்தது போல் அவன் மனைவி சுகுணா என்ன உங்கள் பையன் பண்ணி இருக்கும் காரியத்தை பாருங்கள் என்று ஆரம்பித்தாள். இந்த எக்ஜாமில் கணக்கு பேப்பரில் இவன் மார்க்கை கூட்டினால்,97 மார்க் வருகிறது.ஆனால் மிஸ் 93 என்று தப்பா போட்டிருக்கா,இவன் அதை கரெக்ட் செய்திருக்க வேண்டாமா! இவன் மிஸ்ஸிடம் அதை சொல்லவில்லை அதனால் இவன் செகண்ட் ராங்க் போயிட்டான்,என்று பொருமினாள்
    ஏண்டா மிஸ்கிட்டே கேட்கவில்லை என்றான் சேகர் மகனிடம். இல்லை அப்பா இவ்வளவு
நாள் நான்தானே பஸ்ட்வந்திண்டிருக்கேன் இந்தத்தடவை ரகு பஸ்ட்ராங்க் எடுத்ததால் அவன் மிகவும் சந்தோஷமாகி எல்லோருக்கும் உடனே ஸ்வீட் வாங்கிக்கொடுத்தான். அவனின் அந்த சந்தோஷத்தை கெடுக்கவேண்டாம்னுதான் மிஸ்கிட்ட என்னுடைய மார்க்கை கரெக்ட் பண்ணசொல்லலை! அதனாலே என்ன அப்பா....அடுத்ததடவை நான் பஸ்ட்ரேங்க் வாங்கிடறேன் என்றான் அவ்ன் நிதானமாக.
           சுரீரென்று உறைத்தது சேகருக்கு,இவனுக்கு இருக்கும் மனப்பக்குவம்கூட தனக்கு ஏன் இல்லாமல் போயிற்று என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டு சபாஷ் என்று அவனை முதுகில் தட்டிக்கொடுத்தான். சுகுணாவுக்கோ ஒன்றுமே புரியவில்லை.எப்பொழுதுமே பஸ்ட்ராங்க் தான் வரவேண்டும் என்று சொல்பவருக்கு இன்று என்ன ஆகிவிட்டது என்று
அவனை மேலும் கீழும் பார்த்தாள்.

ஸ்தோத்திரம்

                        ஶ்ரீ லக்ஷ்மி நரஸிம்ம ஸ்தோத்திரம்.
   ஸிம்ஹமுகே ரௌத்ர ரூபிண்யாம், அபயஹஸ்தாங்கித கருணாமூர்த்தே,
   ஸர்வ வியாபிதம் லோக ரக்‌ஷகம் ,பாபவிமோசனம் துரித நிவாரணம்,
   லக்ஷ்மி கடாக்‌ஷம் ஸர்வா பீஷ்டம்,அனேஹம் தேஹி லக்ஷ்மி நரஸிம்மஹ:
தினமும் இதை  சிரத்தையுடன் படித்தால்,மனதில் தைரியம்,லக்ஷ்மி கடாக்‌ஷம்,
இஷ்ட காரியசித்தி,விவாகம், சர்வ துக்க நிவாரணம்,மற்றும் பல நன்மைகளை
நமக்கு வாரி வழங்கிடும்.மிக மிக சக்திவாய்ந்தது. இந்த லக்ஷ்மி நரஸிம்ம ஸ்தோத்திரம்.

Thursday, August 7, 2014

பாஹி நரஸிம்மா



"பாஹி நரஸிம்மா நரஸிம்ம பாஹி" என்று கூவி அழைத்தால்
பாய்ந்தோடி வந்திடுவாய் உற்சாகமாகவே தினமும் உன்னை

"பாலகனான பக்தன் அழைத்ததற்கே தூணை பிளந்து
பிரகலாதவரதனாய் சிம்மரூபமெடுத்த நீ எம்மை
பாஹி நரஸிம்மா நரஸிம்ம பாஹி" என்று கூவி அழைத்தால்
பாய்ந்தோடி வந்திடுவாய் உற்சாகமாகவே தினமும் உன்னை

"பார்கவ, யோக, சக்ரவட, அஹோபில, வராக, மாலோல,
ஜ்வால, பாவன, காரஞ்ஜ, வெனும் நவ நரஸிம்மராக
அஹோபிலமதில் ஆனந்தமாய் தரிசனம் அளிக்கும் லக்ஷ்மி
நரஸிம்மனான உன்னை நொடிப்பொழுதும் மறவாத எம்மை
பாஹி நரஸிம்மா நரஸிம்ம பாஹி" என்று கூவி அழைத்தால்
பாய்ந்தோடி வந்திடுவாய் உற்சாகமாகவே தினமும் உன்னை


   

Sunday, June 8, 2014

விஷமக்கண்ணனின் வேடிக்கை விளையாட்டுகள்.

                      விஷமக்கண்ணனின் வேடிக்கை விளையாட்டுகள்.
    நான் எழுதப்போவது எனக்கு மிகவும் பிடித்த,குறும்புகளும்,பொல்லாத்தனங்களும்,செய்து இடையர் குல பெண்களையும்,சிறுவர்,சிறுமிகளையும்,பாடாய்படுத்திய மாயவன் கண்ணன் செய்தகுறும்புகளில் இருந்து சில உதாரணங்கள். உங்களுக்கும் நிச்சயம் இது பிடிக்கும் என்பது எனக்குத்தெரியும்.திரும்பத் திரும்ப படித்தாலும் திகட்டாத வேடிக்கையாய் கண்ணன்
செய்த திருட்டுத்தனத்தையும்,விஷமங்களையும்,மாயச்செயல்கள் சிலவற்றையும்,இப்போது பார்ப்போமா?

          ஆயர்பாடியில் ஒன்றும் அறியாதவன் போல் கண்ணன் மற்ற சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தான்.அங்கே தண்ணீர் குடத்துடன் வந்த ஒருத்தி சற்றே நின்று,கண்ணா இங்கே வா என்று அழைத்தாள்.கண்ணனும் மிகவும் பணிவுடன் அவளருகில் வந்து நின்றான். அவள் கேட்டாள்,காலையில் நான் இல்லாத பொழுது நீதானே என் வீட்டில் புகுந்து வெண்ணெய்,பால்,தயிர் எல்லாவற்றையும் எடுத்து தின்று விட்டு பானையையும் கீழே போட்டு உடைத்து விட்டு வந்திருக்கிறாய் என்றாள் அவள்.
       அதற்கு கண்ணன்,இல்லையே!நான் அப்படியெல்லாம் செய்யவேமாட்டேன்.நீ என்னை தவறாக புரிந்து கொண்டிருக்கிறாய்.நான் விடியற்காலையிலேயே இவர்களுடன்
மாடு,கன்றுகளை மேய்க்கசென்று விட்டேன்.நீ வேண்டுமானால் இவர்களிடம் கேட்டுப்பார் என்றான்.மற்ற சிறுவர்களும் ஆம் காலையிலேயே எங்களுடன் கண்ணன் மாடு மேய்க்க வந்து விட்டானே என்றனர் கோரஸாக.
        அதற்குள் அங்கு வந்த மற்றொரு பெண்மணி கண்ணா,நீ இங்குதான் இருக்கிறாயா!
ஏனடா,காலையில் நான் வெளியே சென்று பால் விற்று விட்டு வருவதற்குள் நீ என் வீட்டின் பின்புறம் சென்று மரத்தில் இருந்த மாங்காயையெல்லாம் பறித்துக் எடுத்துக்கொண்டு வந்து விட்டாயே?நீ இப்படி செய்யலாமா,இரு இப்போதே நான் உன்னை யஸோதையிடம் அழைத்துசெல்கிறேன்,என்று கூறிக்கொண்டிருக்கும்பொழுதே,மற்றொறுத்தி அங்கு வேகமாக கண்ணா உன்னைத்தானடா நான்ரொம்ப நேரமாகத்தேடிக்கொண்டிருக்கிறேன்.
ஏன் இப்படி பாடாய் படுத்துகிறாயோ,நேற்று ஆனால் என் பெண்ணை கிள்ளி அழவிட்டாய்.
இன்று அவள் ஆசை ஆசையாக் கேட்டாளே என்று வெல்லசீடை,உப்புசீடை,முறுக்கு,
எல்லாம் செய்து வைத்திருந்தேன், காலையில் நான் பூஜையை முடித்து வருவதற்குள் அதை யெல்லாம் எடுத்து தின்று விட்டு காலி பாத்திரத்தில் கல்லையும்,மண்ணையும் நிறப்பி மூடி
வைத்து விட்டு இங்கு வந்து ஒன்றும் அறியாதவன் போல் உட்கார்ந்திருக்கிறாயா! இரு உன்னை என்ன செய்கிறேன் பார் என்றாள் கோபமாக,இப்படி இன்னும் நான்கைந்து பேர்கள்
வந்து தங்கள் வீட்டில் களவு போனது பற்றியும்,வீட்டில் இருந்த பாத்திரங்கள்,மற்ற எல்லா சாமான்களும் தாறுமாராக கீழே கிடப்பதைபற்றியும்,கூறி விட்டு இனிமேல் இந்த பொல்லாத
கண்ணனை நாம் சும்மா விடக்கூடாது. வாருங்கள் நாம் எல்லோரும் சேர்ந்து கண்ணன்
வீட்டிற்கு சென்று இதை சொல்லலாம்  என்று ஒருவள் கூற,அனைவரும் கிளம்பினார்கள்.
      அவர்கள் யஸோதையின் இல்லத்தருகே வருகையில் ஒருத்தி சொன்னாள்,ஆம்,நாம் எல்லோரும் சேர்ந்து வந்து யஸோதையிடம் முறையிட்டால்,அவள் முன்பு கண்ணனை உரலில் கட்டிப்போட்டது போல் தன் இல்லத்தில் இப்பொழுதும் கட்டிப்போட்டுவிட்டால் நம்மால் சிலநாட்களுக்கு கண்ணனைப்பார்க்கவே முடியாதே,நம்மாலோ,அல்லது நம் பெண்,பிள்ளைகளாலோ கண்ணனைப்பார்க்காமல் இருந்து விடமுடியுமா? அப்போதே நாம் எல்லோரும் கண்ணனை காணாமல்,அவன் வீட்டிற்கு சென்று யஸோதையிடம் மன்றாடி கேட்டு அவனை விடுவித்து அழைத்து வந்தோமே! அது மறந்து விட்டதா? நம் பிள்ளைகள் தான் இதற்கு ஒத்துக்கொள்வார்களா? பின் என்னதான் செய்வது.சரி நான் ஒரு யோஜனை சொல்கிறேன் என்றாள் ஒரு பெண்.என்ன அது என்று கேட்டார்கள் மற்றவர்கள்.
       நாம் எல்லோரும் அவரவர் வீட்டில் தினமும் சமையல் செய்தவுடன் கண்ணனுக்காக ஒரு பங்கை எடுத்து வைத்து விட்டு இதை நீ சாப்பிடு, வேறு எதையும் தொடக்கூடாது என்று சொல்லலாம் என்றாள். அதற்கு மற்றவள்,அவன் சின்னப்பையன்,எப்படிஎல்லா வீட்டு உணவையும்,தினமும் சாப்பிட முடியும்.அவனுக்கு வயிற்றை வலிக்காதா என்றாள்( ஒன்று அவளுக்கு  மறந்து விட்டது.இந்த உலகத்தையே உண்டவனுக்கு இந்த சாப்பாடு ஓர்
கடுகத்தனைகூட இல்லை என்பது)
அங்கிருந்த மற்றொறுத்திக்கு இது ஞாபகம் வர அவன் உலகத்தையே உண்ட மாயவன் அல்லவாஉனக்கு அது மறந்து விட்டதா,என்றாள்.சரி அவள் சொல்வதும் சரிதான் அப்படியே செய்யலாம்,ஆனால் அவனுக்கு மிகவும் பிடித்தவெண்ணெயையும் எடுத்து வைக்க நாம் மறந்து விடக்கூடாது,என்று அவர்கள் ஓர் முடிவுக்கு வந்து இதை கண்ணனிடமே சொல்லி தினமும் தன் பங்கை மட்டுமே அவனை சாப்பிடச் சொல்லவேண்டும் ,நமக்கும் நம் செல்லப்பிள்ளையான கண்ணனுக்கு நாம் தினமும் எல்லாம் செய்து கொடுத்தோம் என்ற சந்தோஷம் கிடைக்கும், அவனும் நம் வீட்டிற்கு வந்து லூட்டி அடிக்காமல் சாப்பிட்டு விட்டு போய் விடுவான்,இது தான் சரி என்று எல்லோருமாய் ஒரு மனதாக தீர்மானித்து  இதை அவனிடமும்  நாம் இப்பொழுதே சென்று கூறி விடுவது நல்லது, என்று முடிவு செய்து கண்ணனிடம்  சென்றார்கள். அனைவரும் தாங்கள் எடுத்த முடிவைப்பற்றி கூற அவனும் ஒன்றும் அறியாதவன் போல் சிரித்துக்கொண்டே சரி,சரி என்று தலையை ஆட்டினான்.
       அவனை பற்றி ஒன்றும் அறியாத அப்பாவிப்பெண்கள் தாங்கள் பெரிதாக எதையோ
சாதித்து விட்டதாக பேசி சிரித்துக்கொண்டு,இனி கண்ணனின் விஷமங்கள் தங்களிடம் செல்லாது என்று பெருமையுடன் கூறிக் கொண்டே நிம்மதியுடன் வீட்டிற்கு சென்றார்கள்.
     கிரிதரனோ தான் எல்லார் வீட்டிற்குள்ளும் சென்று,வருவதற்கு அங்கீகாரமும் கிடைத்து விட்டது.இனி திருட்டுத்தனமாக உள்ளே புக வேண்டியதில்லை, உள்ளே என்னவிஷமங்கள் வேண்டுமானாலும்  இனி செய்யலாம்.அவனுக்கு கிடைக்கப்போவது என்னவோ இரண்டு மடங்கு சாப்பாடு,ஒன்று தன் பங்கு, அடுத்தது மற்றவர்களின் பங்கு,என்று நினைத்து மனதிற்குள் சிரித்துக் கொண்டான். முகில் வண்ணனின் தொடரும் விளையாடல்கள் இது போல்  இன்னும் எத்தனை எத்தனையோ.
   


   
   
   


     
       

     
       

ஆச்சர்யம், அதிசயம்,அற்புதம், ஆனந்தம்.

                          ஆச்சர்யம், அதிசயம்,அற்புதம், ஆனந்தம்.
   எங்கள் மகன் ராஜுவுக்கு அமெரிக்காவில் வேலை கிடைத்து, அவன் அங்கு  செல்வதற்கு ஒரு வாரம்தான் இருந்தது.அங்கு செல்வதற்கு முன் நான்கு நாட்கள் சென்னையில் டிரெயினிங் வேறு. அவன் சென்னை சென்ற பிறகு எங்களுக்கு போன் செய்து, அமெரிக்கா போவதற்கு முன் நாம் எல்லோருமாக திருப்பதிக்கு சென்று ஶ்ரீ வெங்கடாசலபதியை தரிசனம் செய்ய வேண்டும் என்று சொன்னான்.எங்களுக்கும் ரொம்ப சந்தோஷம்.வருகிறோம்

என்றோம்.இரண்டு நாட்களில்நாங்கள்என் மருமகள்,பேத்தி,எங்கள் சம்பந்திகள் எல்லோரும்
திருச்சியிலிருந்து கிளம்பி சென்னை வந்து சேர்ந்தோம்.சென்னையில் இன்னும் இரண்டு உறவினர்கள் எங்களுடன் சேர்ந்து கொண்டார்கள். எல்லோருக்கும் ராஜு (பஸ்ஸில் சென்று வரவும்,அவர்களே ஒரே நாளில் ஶ்ரீ வெங்கடாசலபதியையும்,தரிசனம் செய்து வைத்து விடுவதாகவும் சொன்னதைக்கேட்டு) டிக்கெட் புக் செய்து விட்டான்.மறுநாள் இரவு அவனுக்கு அமெரிக்கா செல்ல வேண்டும்.
       திருப்பதி மலைமேல் போய் சேர்ந்ததும் தான் தெரிந்தது, தரிசனம் கிடைக்க இன்னும்
குறைந்தது இரண்டு நாட்களாவது ஆகும் என்பது.எங்களுக்கு மிகவும் கவலையாகிவிட்டது பெருமாளை தரிசிக்க முடியாமல் போய்விடுமோ? என்று. என்ன சோதனை நாங்கள் எவ்வளவு ஆவலாக வந்தோம் தரிசனம் செய்ய,மனதில் கவலையுடன் கோவிலை வலம் வந்து கொண்டிருந்தோம். நமக்குத்தெரிந்தவர்கள் யாரேனும் வருகிறார்களா? என்று நான் எல்லா
இடங்களையும் சுற்றிப்பார்த்துக்கொண்டே வந்தேன்.இங்கும் உனக்குத்தெரிந்தவர்கள் வரப்போகிறார்களா என்று கேட்ட கணவரிடம் எனக்கு என்னவோ தோன்றுகிறது பார்க்கிறேன், என்று சொல்லியபடி நானும் இவ்வளவு பெரிய கூட்டத்தில் யாராவது இருக்க மாட்டார்களா என்று சுற்று முற்றும் பார்த்தேன்.நான் எதிர் பார்த்தது வீண்போகவில்லை.

     
       
          "ஆச்சர்யம்"எங்கள் எதிரில் என் அக்காவின் பெண்ணும்,மாப்பிள்ளையும்,வந்து கொண்டிருந்தார்கள்.சிறிது நேரம் அவர்களிடம் பேசிய பிறகு,எங்களுக்கு இன்று தரிசனம் கிடைக்காது போல் இருக்கிறது.ராஜூவுக்கு நாளைக்கு அமெரிக்கா செல்ல வேண்டும்.
என்ன செய்வது என்று தெரியவில்லை,என்று மிகவும் வருத்தமுடன் சொன்னோம்.அவர்களும்
கொஞ்ச நேரத்தில் கிளம்பி சென்று விட்டார்கள்.நாங்களும் இன்று கொடுத்து வைத்தது அவ்வளவு தான், கோபுரதரிசனமாவது கிடைத்ததேஎன்று மனதை சமாதானம் செய்து
கொண்டு செருப்பு வைக்கும் இடம் நோக்கி சென்று கொண்டிருந்தோம்.இந்தக்கூட்டத்தில் எப்படிஅவர்களை பார்த்தோம் என்பதே ஓர் ஆச்சர்யம்.
          " அதிசயம்" பின்னால் இருந்து யாரோ கூப்பிடுவது போல் இருக்கவே திரும்பி
பார்த்தோம்.அங்கு என் அக்காவின் மாப்பிள்ளை வேகமாக வந்து கொண்டிருந்தார்.
 என்ன ஆயிற்று என்று கேட்டேன்,அதற்கு அவர் இந்த டிக்கெட்டைகளை உங்களிடம்
கொடுப்பதற்கு தான் வந்தேன்.காலையில் நாங்கள் திருக்கல்யாண உத்ஸவம் செய்தோம் அப்பொழுது நாங்கள் ஏழுமலையானை மிகவும் நன்றாக தரிசனம் செய்து விட்டோம்.இதில் நான்குபேர் உள்ளே சென்று பெருமாளை தரிசிக்கலாம்என்றார்.பிறகு அவர் இதையும் சொன்னார்.( என் அக்கா,அத்திம்பேருடன் தான் நாங்கள் வந்தோம்.அவர்களிடம் தான் டிக்கெட்டுகள் இருந்தது.அதில் சாயங்காலசேவை உண்டாஎன்று டிக்கெட்டை பார்த்து
தெரிந்து கொண்டு பிறகு உங்களிடம் கூறலாமே என்றுதான் அப்பொழுதே நான் ஒன்றும்
சொல்லவில்லை என்றார்.) எங்களுக்கு அவசர வேலை இருப்பதால் நாங்கள் இப்பொழுதே சென்னைக்கு கிளம்ப வேண்டும்.என்று சொல்லிவிட்டு டிக்கெட்களைக் கொடுத்தார்.
            அவருக்கு நாங்கள் எல்லோரும் ஒரு முகமாக எங்கள் நன்றியையும் தெரிவித்துவிட்டு டிக்கெட்டுகளை வாங்கிக்கொண்டோம்.அப்பொழுது நாங்கள் அடைந்த  சந்தோஷத்தை
வர்ணிக்க எனக்கு வார்த்தைகள் ஒன்றுமே கிடைக்கவில்லை.இப்படியும் ஓர் இன்பமயமான
அதிசயமா?
        "அற்புதம்" அன்று முக்கியமான நாங்கள் நான்குபேர் சென்று ஶ்ரீவெங்கடாசலபதியை
தரிசிப்பது என தீர்மானித்தோம்.மற்றவர்கள் பிறகு சேவிக்கலாம் என்று முடிவாயிற்று.
நாங்கள் சாயங்கால சேவைக்கு செல்லுமுன் ஶ்ரீவராக ஸ்வாமியை தரிசித்துக்கொண்டோம்.
அங்கிருந்து வந்து தரிசனத்திற்கான கியூவில் நின்று கொண்டோம். அரைமணி நேரத்தில் எங்களுக்கு திவ்யமாக தரிசனம் கிடைத்தது. அப்பப்பா என்ன ஓர் கண் கொள்ளாக்காட்க்ஷி.
எப்படிப்பட்ட பட்ட சேவை. எங்களுக்கு இப்படி ஓர் தரிசனம் கிடைக்கும் என்று நாங்கள் எதிர் பார்க்கவே இல்லை. மீண்டும்,மீண்டும், நினைத்துப்பார்த்துப் பரவசம் அடைந்தோம் நாங்கள்.இப்படியும் ஓர் அற்புதமா?
     "ஆனந்தம்"ஶ்ரீகோவிந்தனின் அருளாளும்,அவரின் கிருபை எங்களுக்கு இருந்ததாலும்,
 எங்களால் அவரை மனமார தரிசிக்க முடிந்தது.இப்படி ஆச்சர்யம்,அதிசயம்,அற்புதம், எல்லாவற்றையும் ஒரங்கே ,அளித்து எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது ஓர் ஆனந்தமே!
        மற்றவர்களும் இன்னொருநாள் சென்று ஶ்ரீஏழுமலையானைஆனந்தமாக தரிசித்தார்கள்
என்பதை சொல்லவும் வேண்டுமா? இது 2000ஆம் ஆண்டு நடந்த சம்பவம்.
ஶ்ரீ ஏழுமலையானின் கருணா கடாக்‌ஷம் இருந்தால் எதுவும் எப்பொழுதும் நடக்கலாம் .



     


   

     

Friday, March 7, 2014

எழுதுகோலும் நமக்கு ஓர் குருவே!

       நாம் எழுதும் பேனா, பென்சில், சிலேட்டுக்குச்சி எல்லாமே ஓர்ஆசிரியர். எப்படி தெரியுமா? தன்னிடம் இருக்கும் எல்லாவற்றையுமே மிச்சமில்லாமல் அது கொடுத்து விடுகிறது. நல்லது எழுதுகிறானா, நல்லவன் எழுதுகிறானா, என்பதையெல்லாம் அது பார்ப்பதில்லை. அந்த எழுதுகோல்கள் நமக்கு எதை புரிய வைக்கிறது தெரியுமா? தான் வந்த நோக்கம் என்னவோ அதை எந்தக்குறையும் இல்லாமல் செய்து முடிக்கவேண்டும். அதனுடைய பலாபலன்களை எதிர் பார்க்கக்கூடாது. நினைத்துப்பார்த்தால் எத்தனை ஆச்சர்யமாக இருக்கிறது. நம்மையும் பற்று வைக்காமல், எதிர் பார்ப்பு இல்லாமல் கடமையை செய், என்று சொல்கிறது அது. 
     இன்னொரு விஷயம் - அது பேப்பரை நோக்கி குனியும்பொழுதுதான் எழுதும்; நிமிர்ந்தால் எழுதாது. அது போல் பணிவுடன் நாம் இருந்தால் மற்றவர்களுக்கும்  நம்மால் பலன் உண்டு. அவர்களும் நம்மை மதிப்பார்கள். நிமிர்ந்து ஆவணமாக இருந்தால், எவராலும் மதிக்கப்படவும் மாட்டோம், எவருக்கும் பயன்படவும் மாட்டோம். எத்தனை அழகான அறிவார்த்தமான சொற்கள்!

சம்போ சங்கர மஹாதேவா

சம்போ சங்கர மஹாதேவா சாம்ப சதாசிவ மஹாதேவா
சம்போ சங்கர சாம்ப சதாசிவ அம்பா நாதா மஹாதேவா
ஹரஹர ஹரஹர மஹாதேவாசிவசிவ சிவசிவ மஹாதேவா

கனக சபேஸா மஹாதேவா கங்காதரா மஹாதேவா
கனக சபேஸா கங்காதரா கிரிஜா ரமணா மஹாதேவா
ஹரஹர ஹரஹர மஹாதேவாசிவசிவ சிவசிவ மஹாதேவா


சிதம்பரேஸா மஹாதேவா சிவகண சுகிதா மஹாதேவா
சிதம்பரேஸா சிவகண சுகிதா சிவகாமிப்பிரிய மஹாதேவா
ஹரஹர ஹரஹர மஹாதேவா சிவசிவ சிவசிவ மஹாதேவா

நீலகண்டா மஹாதேவா ந்ந்தி வாகன மஹாதேவா
நீலகண்டா ந்ந்தி வாகன உமாமகேசா மஹாதேவா
ஹரஹர ஹரஹர மஹாதேவா சிவசிவ சிவசிவ மஹாதேவா

Wednesday, March 5, 2014

அன்பே சிவம்

           நாம் இந்த பூமியில் இருப்பது ஒரு சத்திரத்தில் சிறிது நாட்கள் தங்கி விட்டு வேறு இடத்திற்கு செல்வது போல் தான். அந்த கொஞ்ச காலங்களில் ஏன் இந்த போட்டி, சண்டை, கோபம், ஆத்திரமெல்லாம். சின்ன விஷயங்களுக்கெல்லாம் அனாவசியமாக சண்டை போட்டு நம் நிம்மதியையும் கெடுத்துக்கொண்டு அடுத்தவர் நிம்மதியையும் கெடுத்து, இதெல்லாம் அவசியமா நினைத்துப் பார்த்தால் இது  எல்லாமே அனாவசியம் என்பது புரியும். நாம் ஏன் இப்படி இருந்தோம், என்று நினைத்து, வருத்தப்படுவோம். இது நமக்குத்தேவையா?
           நம்மால் முடிந்தவரை யாருடனும் சண்டை போடாமல் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு, அன்பாகவும், ஆசையாகவும் இருக்கவேண்டும். அன்பு ஒன்றே ஆனந்தமயமான வாழ்க்கைக்கு ஆதாரம். நாம் முயற்சி செய்துதான் பார்ப்போமே.

அன்பே சிவம் என்று
ஆராதனை செய்து 
இன்புற்றிருக்க
ஈசனே என்றும்
உன்னை வேண்டுகிறேன்
ஊக்கம் அளித்து
எனது ஆசையை
ஏற்றுக்கொண்டு
ஐம்புலன்களையும் அடக்க
ஒரு நல்லவாய்ப்பளித்து
ஓய்வு இல்லாமல்
ஔடதமென 
உன் பெயரை தியானிக்க அருள்வாய்! 
நீ என்றும் அருமருந்தே!
                                     



மாபெரும் சக்தி

   இந்த உலகத்தையே ஒருவன் பொய் சொல்லி ஏமாற்றி விடலாம், ஆனால் அவன் மனதிற்குள் ஒளிந்திருக்கும் மனசாட்க்ஷி  என்ற சத்தியத்தை அவன் ஆயுள் உள்ள வரை ஒரு நாளும் அவனால் பொய் சொல்லி ஏமாற்ற முடியாது. அது யாராலுமே ஏமாற்ற முடியாத உண்மையின் இருப்பிடம். ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கும் மாபெரும் சக்தியும் அதுவே.

Friday, February 21, 2014

ஆறுமுக வேல்! வேல்!

அன்புடனே நாம்பணியும் ஆறுமுக வேல் வேல்!
இன்றி அமையாத ஈசனுமை பாலன் வேல்!
உன்னதமாக ஊக்கமுடன் காக்கும் வேல்!  
எங்கும் நிறைந்திருக்கும் ஏற்றமிக்க வேல் வேல்!
ஐயங்களை தீர்த்திடும் ஒப்பற்ற வேல் வேல்!
ஓம்காரமாய் விளங்கும் ஔடதமே அந்த வேல்!

குமரவேல்! முருகவேல்! வெற்றிவேல்! வீரவேல்!
அன்புடனே நாம் பணியும் ஆறுமுக வேல்! வேல்!


சாரங்கனா சண்முகனா

பக்தி ரசமுடனும் உள்ளன்புடனும் பரவசமுடனும் நாம் தரிசனம் செய்வது              

பச்சைமாமலை மேனியன் சாரங்கனையா - படை வீடு  கொண்ட பாலன் சண்முகனையா
கோபியருடன்குலாவிய கோபாலனையா - கோலமயில் வாகன சரவணனையா                        

குன்றை குடையாய் எடுத்த கிரிதரனையா - குன்றுதோர் ஆடிடும் அந்த குமரனையா
விந்தை பல காட்டிய தாமோதரனையா - தந்தைக்குபதேசம் செய்த ஸ்கந்தனையா

பக்தி ரசமுடனும் உள்ளன்புடனும் பரவசமுடனும் நாம் தரிசிப்பது
நம் இரு கண்களாய் ஆன சாரங்கராஜனையும் சண்முகநாதனையுமே!       

ஶ்ரீராம ரசமே!

நாவிற்குகந்த ரசம் என்ன ரசமோ - நம்  
நாவிற்குகந்த ரசம் என்ன ரசமோ!
     
பாங்குடன் நாம் செய்த பருப்பு ரசமா
பரவஸமாய் செய்த அந்த தக்காளி ரசமா     

தைரியமுடன் செய்த திப்பிலி ரசமா
சிரத்தையுடன் நாம் செய்த ஜீரக ரசமா  

கரும்பை பிழிந்து செய்த கரும்பு ரசமா
கருத்துடன் நாம் செய்த பழ ரசமா   

எத்தனை வகை ரசங்கள் செய்தாலும் - நம் 
நாவிற்கும் மனதிற்கும் காதிற்கும் உகந்தரசம் 
ராமதாசன் அனுமன் சதா ஜபித்திடும் 
ராம ரசமே! ஶ்ரீராம ரசமே!

Friday, February 14, 2014

அல்லிக்கேணி மன்னன்

அல்லிக்கேணியை அரசாளும் மன்னவன்
அன்புடன் பார்த்தனுக்கு அருளிய சாரதி
(திரு)  அல்லிக்கேணியை

ஆயர் குலத்துதித்த அழகன் துவாரகை செல்வன்
தர்மத்தின்தலைவனாய்  கண்கொள்ளாக் காட்ஷியுடன்  
(திரு)  அல்லிக்கேணியை அரசாளும் மன்னவன்
                                    
தேரோடும் வீதியிலே ஆனந்த முகில் வண்ணன்
திவ்ய அலங்காரமாய் தேவியுடன் பவனிவர
அடியவரெல்லாம் மந்திர கோஷம் ஓதிடவே
வெகு ஆனந்தமாய் அனைவரும் கண்டுகளிக்க
(திரு)  அல்லிக்கேணியை அரசாளும் மன்னவன் 

பூலோக வைகுண்டம்

மனதிற்குகந்தது மாதவன் அவதரித்த வடமதுரையா
இன்னமுதன் அந்த மாயவன் வளர்ந்த கோகுலமா
ஆயர்களுடன் அழகன் மாடுமேய்த்த ஆயர்பாடியா
ராதையுடன்கண்ணன் ஆடிய பிருந்தாவனமா
குழந்தையாய் கொஞ்சி விளையாடும் குருபவனமா
கோபாலனாய் காட்ஷி அளிக்கும் தட்க்ஷிண துவாரகையா
தீனதயாளனாய் திவ்ய தரிசனம் தரும் திருமலையா
ஆனந்தமாய் அந்த ரங்கன் பள்ளிகொண்ட திருஅரங்கமா
மாலோலனின் கடைக்கண்  பார்வைபட்டால் - எங்குமே
பூலோக வைகுண்டமே! என்றுமே பூலோக வைகுண்டமே!  

திரு ஆரூர் தியாகேசா

     தமிழ் நாட்டில் உள்ள பல பழமையான ஆலயங்களுள் ஆரூர் தியாகேச ஆலயமும் ஒன்று.
இதன் சிறப்புக்கள் சொல்லிலோ எழுத்திலோ அடங்காதவை. மஹாவிஷ்ணு, தேவேந்திரன் ஆகியோரால் பூஜிக்கப்பட்டது இந்த தியாகராஜ விக்ரஹம். இந்த ஆலயம் பல்வேறு சிறப்புக்கள் பெற்றது.
     கோயிலுக்கு ஐந்து பிரதான வாயிற் கோபுரங்கள் இருப்பதும் வருடத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே இறைவனின் திருவடிகளைக்காணமுடியும் என்பதும், குறிப்பிட்ட சில மலர்கள் மட்டுமே அர்ச்சனைக்கு ஏற்பது போன்ற தனி சிறப்புக்கள். இவ்வூரின் பஞ்சவாத்தியமும் உலகப்புகழ் பெற்றது. தஞ்சை பெரியகோவில் மாதிரியே இவ்வாலயத்திலும் கலசநிழல் கீழே விழாதவண்ணம் அமைந்துள்ளது. இங்கு மட்டுமே தந்தம் இல்லாத வினாயகரை தரிசிக்கலாம்.
      திரு ஆரூர் தேர், அதற்குத்தான் எத்தனை மகிமை. முன்னூறு டன்னுக்குமேல் எடையுள்ள பிரும்மாண்டமான இவ் ஆழித்தேரை இன்றைக்கெல்லாம் பார்த்துக்கொண்டே இருக்கலாம். "திரு ஆரூர் தேர் அழகு" என்று சொல்லும் பழமொழிக்கு ஏற்ப இந்தத்தேர் தான் எத்தனை கலை அம்சம் பொருந்தியது. இவ்வாழித்தேரைத்தவிர மற்ற வாகனங்களில் தியாகேசர் வீதி உலா வருவதில்லை. கிரகணகாலத்திலும் நடை திறந்து இறைவனுக்கு அபிஷேகம் செய்யப்படுவது இங்கு தனி சிறப்பு.
      இங்கு தெப்போற்சவம் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்தத்தெப்பமும் மிகப்பெரியது. இதில் குறைந்தது 200 பேராவது கண்டிப்பாக அமரமுடியும். தெப்பத்தின் உள்ளே பெரிய பெரிய வித்வான்களின் கச்சேரிகளும் நடைபெரும்.
       இவ்வூருக்கு மற்றுமொரு சிறப்பு, ஐந்துவேலி ஆலயம் ஐந்துவேலி கமலாலயம். கமலாலயம் என்பது இங்குள்ள திருக்குளத்தின் பெயர். ஆலயம் என்ற பெயர் கொண்ட திருக்குளம் இது ஒன்றே.
       இவ்வூரில் தனக்கென தனி கொடிமரம், தனிமதில், தனிக்கோயில் கொண்டு மோனத்தவநிலையில் காட்க்ஷி அளிக்கும் கமலாம்பிகையின் பேரெழிலை காண கண்கள் கோடிவேண்டும். இங்கு அம்பாள் சிவசக்தி வடிவமாய் சிரசில் கங்கையும் பிறையையும் அணிந்து அருள் புரிகிறாள். இங்கேயே ஷண்முகனைகொஞ்சும் அன்னையாய் நீலோத்பலாம்பளையும் தரிசிக்கலாம்.
      இவ்வூரில் சங்கீத மும்மூர்த்திகள் அவதரித்ததும் மற்றுமொறு சிறப்பு. தீட்ஷதர் பாடிய வாதாபிகணபதிம், வல்லபநாயகஸ்ய, ஶ்ரீமஹாகணபதிம் போன்ற வினாயகர் கீர்த்தனைகள் அனைத்தும் இங்குள்ள வினாயகரின் மேல் பாடப்பட்டவைகள். நவாவர்ண கிருதிகளால் கமலாம்பாளையும் தீட்ஷதர் பாடிப்பணிந்து பரவசம் அடைந்துள்ளார் என்பதும்ஒரு சிறப்பு.
         இப்படி இன்னும் பல புகழ்களை கொண்டது திருவாரூர். ஊரழகு, பேரழகு, நீரழகு, தேரழகு, தெய்வமோஅழகோ அழகு, தெருவுமே அழகு என அழகெல்லாம் ஒருசேர விளங்கிடும் இக்கோயிலை கண்டுமகிழ இப்பொழுதே புறப்படுங்கள்.

இது நான் பல இடங்களிலிருந்து படித்தும் கேட்டும் அறிந்த தகவல்கள். திருவாரூருக்கு பக்கத்தில்தான் நான் பிறந்து வளர்ந்த கிராமம் கல்யாணமஹாதேவி உள்ளது.
          

வேங்கடநாயகா தயை புரியாயோ

ஒப்பில்லாத புகழ் உடையவனே  உனை அன்றி வேறுதுணை உளதோ 
கார்கால மேகநிறமுடையவனே கணக்கற்ற மாயச்செயல் ஆற்றவல்லவனே 
உலகளந்த உனது திருவடிகளை நான் கணப்பொழுதும் மறவேனே கண்ணா 
இவ்வடிமையை நீயும் கைவிடலாகுமோ இனியவனே இன்றி அமையாதவனே 
கோவிந்தா  கோதண்டராமா என்று நான் கதறுவது 
உனக்கு கேட்கவில்லையோ எம்மை ஆளும் ஆராவமுதனே 
ஐயா என் வினை  தீர்த்திடாயோமாயோனே
                                                                                   
தயை புரியாயோ  வேங்கடநாயகா    
தண்டனிட்டேன் உன்னை கலியுகவரதா                         
மாயம் பலநிறைந்த இப்பூவுலகினிலே   
மயங்கியே நான்உன்னை மறவாதிருக்க
தயை புரியாயோ ...

சிந்தை தனில் உன்னை இருத்தியே நான்  
ஆனந்தமாய் உன்தன் புகழ்தனை பாடிடவே        
மந்தஹாசமாய் புன்னகைத்து நிற்கும் 
மலையப்பா கோவிந்தா கருடத்வஜா  நீ                        
தயை புரியாயோ ...

குருவாயூர் வந்தானே கோகுலபாலன்

பிரளய நீரில் மிதந்த பாலனை! பரந்தாமனை! உண்ணிகருஷ்ணனை! 
பரவசமாய் குருவும் வாயுவும் பார்த்து  அள்ளி அணைத்து ஆனந்தக்கூத்தாடி  
துள்ளி ஓடும் ப்பாலகனுக்கோர் இடம்தேடியே 
பார்முழுதும் சுற்றி வந்திட அங்கோர் தடாகம் தனில் 
சக்தி சிவனின் நடனம் கண்டு பாலகனின் பிரதாபத்தை அவர்களிடம் கூறவே 

இதுவே இப்பாலகனுக்குகந்த இடம்!
இதுவே தட்ஷிணதுவாரகையான  குருவாயூர்!
என அவரும் உவகையுடனும்  பூரிப்புடனும் கூறி அன்புடன் அவர்களை வரவேற்க 
குருவாயூர் வந்தாரே  கோகுல பாலன்

கோகுலபாலன் குருவாயூர் வந்தானே - இனி குறை ஏதும் நமக்கில்லையே - அந்த
கோகுலபாலன் குருவாயூர் வந்தானே - இனி குறை ஏதும் நமக்கில்லையே

காலில் சலங்கை ஜதிகள்பாடிட கழுத்தில் ரத்தின மாலைகள் அசைந்தாட
பஞ்சாயுதம் தரித்து பாலன் பவனிவர அடியார்கெல்லாம் உற்சாகம் பொங்கிட
கோகுலபாலன் குருவாயூர் வந்தானே - இனி குறை ஏதும் நமக்கில்லையே - அந்த
கோகுலபாலன் குருவாயூர் வந்தானே - இனி குறை ஏதும் நமக்கில்லையே
                                   
மண்ணை தின்று வாயில் உலகைக் காட்டியே அன்னை யஸோதையை அயரசெய்தவன்
பால் வெண்ணெய் திருடிய பாலகனாம் நீலமேகசியாமளன் நித்ய அலங்காரரூபன்        
கோகுலபாலன் குருவாயூர் வந்தானே - இனி குறை ஏதும் நமக்கில்லையே - அந்த
கோகுலபாலன் குருவாயூர் வந்தானே - இனி குறை ஏதும் நமக்கில்லையே
  
ஆயர்பாடி கோபியர்கள் தாபமுடன் பார்த்திட ராதையுடன் கைகோர்த்து ஆடிய கள்வன்
பார்த்தனுக்கு சாரதியாய் தேரையும் ஓட்டிபல பணிகள் புரிந்த துவாரகை மன்னன்
கோகுலபாலன் குருவாயூர் வந்தானே - இனி குறை ஏதும் நமக்கில்லையே - அந்த
கோகுலபாலன் குருவாயூர் வந்தானே - இனி குறை ஏதும் நமக்கில்லையே

பஞ்ச வாத்தியங்கள் திக்கெட்டும் முழங்கிட பக்தர்கள் அனைவரும் ஆனந்தமாய் ஆட       
குறையாவும் தீர்ந்து நிறை வாழ்வு பெறவே குருவாயூர் செல்லுவோம் நாமுமே வாருங்கள்                     
கோகுலபாலன் குருவாயூர் வந்தானே - இனி குறை ஏதும் நமக்கில்லையே - அந்த
கோகுலபாலன் குருவாயூர் வந்தானே - இனி குறை ஏதும் நமக்கில்லையே

 


Wednesday, February 5, 2014

கண்ணா நடனம் ஆடினாயே

ஆனந்தமாய் நடனம் ஆடினாயே கண்ணா 
காளிங்கன் மேல் உன்பொற்பாதத்தை பதித்து (வெகு) 
ஆனந்தமாய் நடனம் ஆடினாயே கண்ணா       

கண்ணா மணிவண்ணா என்றலரிய அடியவன் 
கஜேந்திரனுக்கருளிய கார்வண்ணா (நீ வெகு)
ஆனந்தமாய்  நடனம் ஆடினாயே கண்ணா                                                            

உலகையே உண்டும் பசி தீராமல் - நீ 
வெண்ணையையும் திருடி உண்டாயே
என் மனம் அறியாயோ மன்மதனே 
உன்தன் எண்ணம்தான் என்னவோ அறியேனே 
ஆனந்தமாய் நடனம் ஆடினாயே  கண்ணா

Thursday, January 16, 2014

கண்ணன் வெண்ணெய் திருடிய ரகஸியம்

கண்ணா நீ வெண்ணெய் திருடிய ரகஸியத்தை எனக்குமட்டும் சொல்வாயா அப்பா!

  • அரக்கியிடம் பால் அருந்தியதால் உன் அதரங்கள் சிவந்ததே அதற்கு மருந்திடவா
  • மண்ணை தின்று வாயில் புண் ஏற்பட்டதால் வெண்ணெய் திருடி உண்டாயா.
  • யஸோதை கட்டிய கயிற்றால் உன் இடையில் ஏற்பட்ட புண்ணில் தடவுவதற்கா.
  • ஆனிரை மேய்க்க சென்றதில் கால் நொந்து அதற்கு வெண்ணெய் தடவினாயா.
  • கோவர்த்தன மலையை தூக்கியதால் உன் பிஞ்சு விரலில் பட்ட காயத்திற்கு மருந்திடவா.
  • குழலெடுத்து இசை இசைத்ததில் உன்கொவ்வைசெவ்வாய் கொப்பளித்து அதில் பூசவா.

    
இல்லை கண்ணா இல்லை. நானே அந்த ரகஸியத்தை கூறிவிடவா கண்ணா. உன் அழகிய பொன்மேனியை மேலும் மெருகூட்டி ராதையின் மனதில் இடம் பெருவதற்கு தானே நீ வெண்ணெயைத் திருடி உண்டாய்! மாயக்கண்ணனே!

ரயில் பயணம்

          சுமார் ஐம்பதுவருடங்களுக்குமுன் 1961ல் நடந்த சம்பவம். அப்பொழுதுதான் எனக்கு கல்யாணம் ஆகி நானும் என் கணவரும் சென்னையிலிருந்து  டில்லிக்கு பயணம் செய்தோம். எனக்கு அப்பொழுது வயது பதினாறு. அதற்குமுன் நான் சென்னையைத்தாண்டி எங்குமே சென்றதில்லை. வேறு எந்த மொழியும் எனக்குத்தெரியாது (தமிழ் தவிர). டில்லியில்தான் என் கணவருக்கு வேலை.
          நாங்கள் சென்னை சென்ரலில் டீலக்ஸ் ஏர்கண்டிஷன் ரயிலில் ஏறி உட்கார்ந்தோம். எனக்கு அதுவே மிகவும் திரில்லிங்காக இருந்தது. எங்களை வழி அனுப்ப வந்த உறவினர்கள் மற்றும் சினேகிதர்களுடன் என் கணவர் கீழே நின்று பேசிக்கொண்டிருந்தார். நான்பேசுவது வெளியே இருப்பவர்களுக்கு கேட்காது என்று தெரியாமல் நானும் ஏதோ பேசினேன். பிறகு தான் நான் பேசுவது எதுவும் அவர்களுக்கு கேட்காது என்பதை கணவர் மூலம் தெரிந்து கொண்டேன். ஒருவழியாக ரயிலும் கிளம்பியது.
           மறுநாள் காலை காசிப்பட் ஸ்டேஷனில் ரயில் நின்றவுடன் என் கணவர் கீழே இறங்கி பேப்பர் வாங்கி வருகிறேன் பத்திரமாக இரு  என்று கூறிவிட்டு இறங்கினார். நானும் வெளியே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன்.
            ரயில் சற்று நேரத்தில் கிளம்பி விட்டது. பேப்பர் வாங்க போன என் கணவர் வரவில்லை. எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. அழுது கொண்டே ஶ்ரீராமஜயம் சொல்லிக்கொண்டிருந்தேன். எதிர் சீட்டில் இரண்டு சர்தார்ஜிகள் உட்கார்ந்திருந்தார்கள். நான் சர்தார்ஜிக்களையே பார்த்ததில்லை. அவர்களை பார்த்து எனக்கு மேலும் பயம். நல்லவேளை பின்சீட்டில் தமிழ் பேசும் மாமா மாமி எங்களுடன் பயணம் செய்தார்கள். அவர்கள் என்னிடம் வந்து ஏன் அழுகிறாய் என்ன ஆச்சு என்று கேட்டார்கள்.
        நானும் என் கணவர் கீழே இறங்கியதையும் ரயில் கிளம்பியும் அவர் வரவில்லையே எனக்கு பயமாக இருக்கிறது என்று கூறிவிட்டு அழுது விட்டேன். அதற்கு அவர்கள் பயப்படாதே அவர் ரயிலைத்தவற விட்டிருப்பார் அடுத்த ரயிலில் வந்து விடுவார் என்றும்  டில்லியில் உங்களை வரவேற்பதற்கு யாராவது வருவார்களா  என்றும் கேட்டார்கள்.  ஸ்டேஷனுக்கு என் மைத்துணர்கள் வருவார்கள் ஆனால் எனக்கு யாரையுமே சரியாக அடையாளம் கண்டுபிடிக்க முடியாது கல்யாணத்தன்று பார்த்தது என்று சொன்னேன். நாங்கள்அவர்களை கண்டுபிடித்து உன்னை அவர்களிடம் விட்டுவிடுகிறோம் அழாதே என்று சொன்னார்கள். என்ன செய்வது என்று தெரியாமல் அவர் என்னை ஏமாற்றி விட்டு போய் விட்டாரோ என்று நினைத்து அழுது கொண்டிருந்தேன்.
           அடுத்த ஸ்டேஷன் வந்தவுடன் கீழே இறங்கி விடுவது என்று முடிவு செய்தேன். அரைமணி நேரம் அப்படியே ஶ்ரீராமஜயம் சொல்லிக்கொண்டும் மேலே என்ன செய்வது என்று யோஜித்துக்கொண்டும் உட்கார்ந்திருந்தேன்.  என்ன யோஜனை என்று கேட்டுக்கொண்டே என் கணவர் என் தோளை தட்டினார். எனக்கோ என்ன சொல்வது என்று தெரியவில்லை. இன்னும்வேகமாக அழ ஆரம்பித்து விட்டேன். பின் சீட்டில் இருந்த மாமா என்ன ஆயிற்று சார் ஏன் இத்தனை நேரம் நீங்கள் வருவதற்கு உங்கள் மனைவி பயந்துவிட்டார் என்றார்.
           என் கணவர் நடந்ததை கூறினார். ரயில் கிளம்பியதும் அவர் அடுத்த கம்பார்ட்மெண்டில் ஏறி வந்து கொண்டிருந்தாராம் அங்கு அவருடைய பழைய சினேகிதர் ஒருவரை பார்த்துவிட்டார் அவருடன் பேசிக்கொண்டிருந்ததில் நான் தனியாக உட்கார்ந்திருப்பதை மறந்து விட்டாராம். சிறிது நேரத்தில் ஞாபகம் வந்தவுடன் வந்துவிட்டேன்என்று சர்வ சாதாரணமாகச்சொன்னார். எனக்கோ அப்பொழுது தான் வேறொரு கம்பார்ட்மென்டிலிருந்து வெச்டிபுல் வழியாக இங்கு வரமுடியும் என்பதே தெரியும்.     அந்த அனுபவத்தைநினைத்தால் இப்பவும் எனக்கு நான் கீழே இறங்கி இருந்தால் என்ன ஆகி இருக்குமோ என்று தோன்றும்.
             ஒன்று சொல்ல மறந்து விட்டேனே. இதில் வேடிக்கை என்ன என்றால் நான் என்னை அறியாமல் ஶ்ரீராமஜயம் சொல்லிக்கொண்டிருந்தேன் என் கணவரின் பெயரும் ஶ்ரீராமன்.
           

மீண்டும் வரங்கள்

      ஆம், அண்ணல் ராமன் பதினான்கு வருட வனவாசம் முடிந்து வெற்றியுடன் புஷ்பகவிமானத்தில் வந்திறங்கிய நன்நாள் தான் அது. உதயசூரியன் ஆவலுடன் எட்டிப்பார்க்க சூரியகுல திலகத்தை சுமந்து வந்த புஷ்பகவிமானம் கீழே இறங்கியது.
       பரதனை விழுங்க தயாராக நின்ற தீக்கனல்கள் சுருண்டன. அண்ணனின் பாதகமலத்தில் தலைவைத்து ஆனந்தக்கண்ணீர் விட்டான் பரதன். மங்கலவாத்தியங்கள் முழங்கின. மக்கள் மகிழ்ச்சியுடனும், ஆரவாரமுடனும் "ரகுராமன்வாழ்க! வெற்றிவீரன்வாழ்க!" என்றுகூவி மகிழ்ந்தனர். பரதனை தூக்கி அணைத்த ராமன் தாயார்களை நோக்கி நடந்தான். மகிழ்ச்சியில் யாவரும் திளைத்தனர். சட்டென கைகேயியின் காலில் விழுந்து வணங்கினான் ராமன். தாயே தாங்கள் சொன்ன சொல்லை காப்பாற்றி விட்டேன் ஆசி கூறுங்கள் என்றான்.
         கலங்கிய முகத்துடன் வார்த்தை எழாமல் நின்ற கைகேயியைப் பார்த்துதுணுக்குற்றான்.
தாயே, ஏன் கண்கள் கலங்குகிறீர்கள். தாங்கள் நினைத்த காரியத்தால் தசமுகனை வென்று வந்திருக்கிறேனே. எதற்காக வருத்தப்படுகிறீர்கள்?
           ராமா! என் மகனே! என்று உதடு துடிக்க கூறிவிட்டு மயங்கிவிழுந்தாள் கைகேயி. ஊர்மிளை ஓடிவந்து தாங்க, சுதகீர்த்தியும் மாண்டவியும் முகத்தில் நீர் தெளித்தனர். தன் மேலாடையால் அன்னையின் முகத்தை துடைத்தான் ராமன். கைகேயியின் கண்களிலிருந்து கண்ணீர். "வனவாசம் போயும் திரும்பி வந்துவிட்டானே என கண்ணீரவடிக்கிறாளா - இவளா என்னை பெற்ற தாய் - இல்லை இவள் ஒரு பேய்," பரதன் கருவினான். அம்மா எழுந்திருங்கள் என்ற ராமன், அவளை அன்புடன் அணைத்து, அங்கு காத்திருந்த ரதம் நோக்கி சென்றான்.
            "நான் பெற்ற மகனே என்னை நாகூசாமல் ஏசுகிறான், ஆனால் நீயோஎன்னிடம் அன்பை பொழிகிறாய். ஒரு கூனியின் சொல் கேட்டதால் நான் பட்ட துன்பங்கள் என்னை கூனிக்குருக வைத்து விட்டது. போதும்ப்பா எனக்கு. உனக்காக நான் உயிர் வாழ்ந்தேன்," வேதனையுடன் கூறினாள் கைகேயி.
            "யார் சொன்னது நீங்கள் கூனிக்குருகியதாக? பார் போற்றும் வெற்றியை எனக்கு அளித்ததே நீங்கள் தானே அம்மா. வெற்றிக்கு மூலமே நீங்கள். தூற்றுபவர்களை மன்னித்து விடுங்கள்". கைகேயியின் முகத்தில் புன்னகையின் சாயல். தாயே அரண்மணை செல்ல உத்தரவு இடுங்கள். திகைப்புடன் கைகேயி "நானா? உன்னைப்பெற்ற உத்தமி கௌசல்யா அவர்கள் கூறட்டும் ராமா" என்றாள் அமைதியாக. "நான் ராமனை ஈன்றவள் மட்டுமே, நீதான் அவனுக்கு பெருமைகளை அளித்தவள் உனக்குத்தான் உரிமை உண்டு கைகேயி," என்றாள் கௌசல்யா.
           கைகேயி களிப்புடன் ராமனும், சீதையும் அயோத்திசெல்லும்படி கூறுகிறேன் மங்கல வாத்தியங்கள் முழங்கட்டும் என்று உத்தரவிட்டாள். வசிஷ்டரும், சுமந்திரரும் அதை ஆமோதித்தனர். ரதத்தின் அருகில் வந்த கைகேயி அங்கேயே நின்றாள்.
            ராமன் அன்னையின் முகத்தை நோக்கி ஏருங்கள் என்றான். அதற்கு கைகேயி முன்பு உன் தந்தையுடன் தேரில் சென்ற பொழுது இரு வரங்கள் கேட்டேன் அல்லவா? இப்பொழுது இத்தேரில் அமருமுன் எனக்கு இரண்டு வரங்கள் வேண்டும் மகனே என்றாள்.
          மீண்டும் இரண்டு வரங்களை? பரதன் கோபமுடன் பாய்ந்து வந்தான். ஆத்திரம் வீரனுக்கு அழகல்ல, அவனை கையமர்த்திவிட்டு கைகேயியை வாஞ்சையுடன் பார்த்த ராமன் கேளுங்கள் அம்மா என்றான்.
         "திருமாலின் அவதாரமே! எனக்கு இப்பிறவியில் பழிச்சொற்களையும், பாவங்களையும் ஏற்றுக்கொள்ளும்படி செய்தாய். இதற்கு நேர்மாறாக உன் அடுத்த அவதாரத்தில் உன்னையே வளர்த்து உலகம் புகழும் தாயாக வாழ வரம்தா. இரண்டாவது, தசரதமன்னனே என் அடுத்த பிறவியிலும் எனக்குமட்டுமே கணவராக வந்து என் கடைசி மூச்சை அவர்மடியில் விடும் பாக்கியத்தைதா", குரல் தழுதழுக்க கூறி முடித்தாள் கைகேயி. எப்படிப்பட்ட அற்புதமான வரங்கள்! வசிஷ்டர் வியந்தார். பரதன் அம்மா என்று கூவிக்கொண்டே புளகாங்கிதமுடன் அவள் காலடியை பற்றி வணங்கி, உங்களை நினைத்து நான் பெருமைபடுகிறேன் என்றான்.
          ராமனுக்கோ கிருஷ்ணாவதாரத்தில் வரப்போகும் யஸோதையும், நந்தகோபரும் கண்முன் தோன்றினார்கள். கைகேயி தன்னை வளர்க்கும் அன்னையாய் மட்டுமே வந்து உலகம் புகழும்படி இருக்கப்போவதை நினைத்துக் கொண்டார்.
      எப்பொழுதோஇக்கதையை நான் படித்துரஸித்திருக்கிறேன். சில இடங்களில் சிலவற்றை மாற்றி எழுதி வலைப்பூவில் பதிவு செய்திருக்கிறேன்.


Thursday, January 9, 2014

குருவாயூரப்பனே குறை தீர்க்கும்வள்ளலே

குருவாயூரப்பனே குறை தீர்க்கும்வள்ளலே
உன் திருமேனி அழகில்நான் மெய்மறந்தேனப்பா 
       நிர்மால்ய தரிசனம் நிறைவாக நான்கண்டேன் 
       தர்மபிரபுவே உன்னை தண்டனிட்டேனப்பா 
கோடிஜன்ம பாபம்தீர உன் திவ்யநாமம் சொல்லியே 
குழலூதும் கிருஷ்ணா நான் சீவேலிசுற்றி வந்தேன் 
       தீராவினை தீர்த்து வைக்கும் கிரிதர கோபாலா 
       பாராமுகம் ஏன் அப்பா பாவி என்தன்மேல் 

ராமாயணத்தில் சுமத்திரை

அவதரித்தார்கள் ரகுகுல பாலன்கள் 
ஆனந்தத்தில் மூழ்கியது அயோத்தி நகரமே! 
தந்தை தசரதர் தானங்கள் பல கொடுக்க 
தாயார்கள் மூவரும் இன்பத்தில் திளைத்திருக்க

கன்னியர் யாவரும் களிப்புடன் கீதம்பாட 
காளயரெல்லாம் மங்கள வாத்யம் இசைக்க
தேவர்களும் மாமுனிவர்களும் பூமாரிபொழிய 
தேவலோகமாய் அயோத்தி காட்ஷி அளிக்க

குலகுரு வசிஷ்டரும் கோலாகலமுடன் வந்து 
குழந்தைகளை மிக்க பெருமையுடன் பார்த்து
ராம-பரத-லஷ்மண-சத்ருக்ண என்று  
நாமம் சூட்டியே அன்புடன் ஆசிர்வதிக்க

அவதரித்தார்கள் ரகுகுல பாலன்கள் 
ஆனந்தத்தில் மூழ்கியது அயோத்தி நகரமே!

ராமாயணத்தில் சுமித்திரை

     ராமாயணத்தில் அதிகம் பேசப்படாதவள் சுமித்திரை. ராமனை பெற்றதால் கோசலைக்கு பெருமை. அந்த ராமனை காட்டிற்கு விரட்டியதால் பிரபலம் அடைந்தாள் கைகேயி. ஆனால் சுமித்திரை அவர்களைப்போல் முக்கியத்துவம் பெறாவிட்டாலும் தன்பெயருக்கு ஏற்றபடி விளங்கியவள். சுமித்திரை என்றால் நல்ல அறிவும் குணமும் உடையவள் என்று அர்த்தம். இத்தகைய பண்புடையவள் ராமாயணத்தில்  கவனிக்கப்படாதவளாகத்தான்  இருந்திருக்கிறார். அப்படியும் அவள் தன் நற்பண்புகளை விட்டுக்கொடுக்கவில்லை.
     இம்மூவருக்கும் பொதுவாக ஓர்ஏக்கம் இருந்தது. ரகுகுலம் தழைக்க தங்களால் ஓர்வாரிசை தரமுடியவில்லையே என்பதுதான் அது. வசிஷ்டர் போன்ற  மகாரிஷிகளும் ஜோசியர்களும் கலந்து ஆலோஜித்து ஓர் முடிவுக்கு வந்தார்கள். புத்திரகாமேஷ்டி யாகம் செய்வது என்று. தசரதரும் இதற்கு இணங்க, யாகம் விமரிசையாக  நடத்தப்பட்டது. மனைவியர் மூவரும் கலந்து கொண்டார்கள்.
     தனக்கு மூன்றாவது இடம்தானே என்று நினைத்தாளோ தெரியவில்லை சுமித்திரை, சற்றே ஒதுங்கி நின்றிறுந்தாள். தசரதன் ஆர்வத்துடனும் மிக்க ஈடுபாடுடனும் செய்த யாகம்  அல்லவா இது. அதற்கு நல்ல பலன் கிடைத்தது. யாகம் முடிவடைந்தபொழுது யாகத் தீயிலிருந்து ஓர்தேவதை ஒரு குவளை பாயசத்தைக் கொடுத்தாள். அதை வினயமாகப்பெற்று கொண்ட தசரதன், தன் மனைவியரைப் பார்த்தான். ஆமாம் பாயசக்குவளைகளை ஏந்திவந்த தசரதன், கோசலை கைகேயியிடம் மட்டும் இரு பொற்கிண்ணங்களில் சரிசம மாக ஊற்றி அந்தப்பாயசத்தை கொடுத்துவிட்டு சென்றுவிட்டார். ஒதுங்கி நின்ற சுமித்திரையை அவர் கவனிக்கவில்லையோ. 
     சுமித்திரையின் கண்களில் ஏக்கம் பொங்கினாலும் மனம் மட்டும் பதற்றத்தை தணித்துக்கொள்ள முயன்றது. மனைவி என்ற அந்தஸ்து கிடைத்தும் தாய் என்ற கௌரவம் தனக்கு கிட்டாமல் போய்விடுமோ பரவாயில்லை, தாதி பொறுப்பாவது கட்டாயம் தனக்கு கிட்டும் என்று ஆறுதல் கொண்டாள். கோசலைக்கும், கைகேயியிக்கும் பிறக்கும் குழந்தைகளை சீராட்டி, தாலாட்டி, வளர்க்கும் பொறுப்பு தனக்கு கிடைக்காமலாபோய் விடும் என்று நினைத்து ஆறுதல் அடைந்தாள். மன்னனாகிய கணவனே தன்னை புறக்கணித்துவிட்ட பிறகு மூத்தாள்களும் மன்னனினின் வழியை பின்பற்றினால், சற்றே சோர்ந்து போனாள்சுமத்திரை. சிறிது கண்மூடி தூணில் சாய்ந்து உட்கார்ந்திருந்தவள், தன்னை யாரோதொட்டு அழைப்பதை உணர்ந்தாள் - கோசலை பின்னால் கைகேயி.
     "என்ன சுமித்திரை, ஏன் ஒதுங்கி நிற்கிறாய்", என்று கைகேயி கேட்டாள். "ஒதுங்கவில்லையே
நீங்கள் இருவரும் இருக்கும் பொழுது நான் முன்வந்து நின்றால் அதிகப்பிரசங்கித்தனம் ஆகாதா", சுமித்திரை தன்உணர்வுகளை அடக்கிக்கொண்டு வினயமாக பதிலளித்தாள். "அதெப்படி உனக்கும் சமவுரிமை இருக்கிறதே, மன்னர் உனக்கு உறிய பங்கைகொடுக்கச்சொல்லி சென்று விட்டார்" என்று சொன்ன கோசலை, சுமித்திரையின் கையை பிரியமுடன் பற்றி தன்பங்கை பாதியாக பகிர்ந்து சுமித்திரையிடம் பாதியை கொடுத்தாள். கோசலையின் பாச உள்ளத்தை அறிந்து கொண்டாள் சுமித்திரை. கணவரை விட்டுக்கொடுக்காத, அதே சமயம் தனக்கும்  ஆதரவாகப்பேசும் உயர்உள்ளம் எத்தனை பேருக்கு வரும்?  இவளுக்கு பிறக்கும் குழந்தை  நிச்சயமாக தர்மவானாகவும், நல்ல பண்புள்ளவனாகவும் தான் இருப்பான் என்று நினைத்துக்கொண்டாள்.
     கைகேயி சுமித்திரையிடம் வந்தாள். "உனக்கு அக்காள் இல்லாத குறையை இவர்கள் தீர்ப்பார்கள் என்று சொல்லித்தானே எங்களுக்கு உன்னை அறிமுகம் செய்துவைத்தார் மன்னர் தசரதர். அதனால் உனக்கும் சமவுரிமை எல்லாவற்றிலும் உண்டு. அது எங்கள் கடமையுமாகும். இந்தா என்பங்கிலிருந்து பாதியைதருகிறேன் வாங்கிக்கொள்" என்றாள் கைகேயி அன்புடன்.  நெகிழ்ந்து போன சுமித்திரை தன்மீது இவ்வளவு பரிவு காட்டும் கைகேயிக்கு பிறக்கும் பிள்ளையும் தனக்கென எதுவும் வேண்டாத நல்ல குணவானாக விளங்க மானசீகமாக ஆசிர்வதித்தாள். கண்களில் நீர்கோர்க்க அவர்கள் கொடுத்த பாயசத்தை பருகினாள். நடுங்கும் கரங்களுடன்  மூவரும் ஒருவரை ஒருவர்  பாசத்துடன் அணைத்துக்கொண்டார்கள்.
     மாதங்கள் ஓடின. மூவரும் கருவுற்றார்கள். கோசலைக்கு இராமனும், கைகேயிக்கு பரதனும்,
சுமித்திரைக்கு லஷ்மண சத்ருக்கனும் பிறந்தார்கள். மன்னர்தசரதனும் பெரும் மகிழ்ச்சி அடைந்து குழந்தைகள் பிறந்த தினத்தை கோலாகலமாக கொண்டாட உத்தரவிட்டார். விழா எல்லாம் இனிதாக நடந்தேறியது. சுமித்திரை தன்குழந்தைகளை எடுத்து கொண்டுவந்து கோசலை கைகேயியின் முன் நின்றாள். இந்தக்குழந்தைகள் நீங்கள் எனக்கு அளித்த பிச்சை. இதோ இலஷ்மணன் இவன் உங்கள் இராமனுடன் உறுதுணையாக இருப்பான், ராமனின் நிழலாக தொடர்வான் - என்று கோசலையிடம் சொன்னாள். பிறகு கைகேயியிடம் திரும்பி, இந்த சத்ருக்கன் உங்கள் பரதனுடன் இணைந்தே வாழ்வான் என்றாள் தழுதழுத்த குரலில் அவர்கள் பொறுப்பில் தன் குழந்தைகளை விட்டு சுமித்திரை நிறைந்த மனதுடன் நின்றாள். என்ன ஓர் உத்தமமானகுணம் இந்த சுமித்திரைக்கு. 
     நான் எப்பொழுதோ படித்து ரஸித்ததை உங்களிடமும் பகிர்ந்த கொள்கிறேன். சில இடங்களில் மாற்றியும் எழுதி இருக்கிறேன்.





  

Friday, December 6, 2013

எப்படி மனமுவந்து கொடுத்தாய்

எப்படி மனமுவந்து கொடுத்தாய் தேவஹியே 
ஈரேழு புவனமாளும் மாயவனைபெற்று - நீ 
எப்படி மனமுவந்து கொடுத்தாய்

முன்னூறு நாள் சுமந்துபெற்றெடுத்த மாதவனை 
முத்தமிட்டு சீராட்டி பாலூட்டி வளர்க்காமல்  - நீ
எப்படி மனமுவந்து கொடுத்தாய்

ஆலின் இலைமேல் துயின்ற பச்சிளம்சிசுவை 
ஆதவன் வருமுன் வசுதேவரிடம் கொடுத்தனுப்பி 
யமுனாநதிக்கரையில் கோகுலம்தனில் இருக்கும் 
யஸோதையிடம் அளித்து வளர்க்க சொல்லிட  - நீ 
எப்படி மனமுவந்து கொடுத்தாய்

பாலகிருஷ்ணனாம்

பாலகிருஷ்ணனாம் கோபாலகிருஷ்ணனாம் 
பாலும்வெண்ணையும் திருடிஉண்ட பக்தவத்ஸலன் 
நீலவண்ணனாம் கண்ணன் நீலவண்ணனாம் 
ஜாலமிக்க செய்பவனின் தாள்பணிந்திடு 
தினமும் தாள்பணிந்திடு தினமும் தாள்பணிந்திடு

Wednesday, December 4, 2013

அன்பழகா வாவா

அன்னைபராசக்தி ஈன்ற அன்பழகா வாவா 
ஆறு படைவீடுடைய ஆறுமுகா வாவா 
இன்னல்யாவும் தீர்த்திடவே இன்னமுதே வாவா 
ஈசர்க்குபதேசம் செய்த ஐயனேநீ வாவா 
உண்மைபொருள் உறைத்திடும் உத்தமனே வாவா 
ஊதுகுழலோன் மருகா முருகா நீ வாவா 
என்தன் உள்ளம் மகிழ்ந்திட என்றும் நீ வாவா 
ஏற்றங்கள் தரும் திருவேலனே நீ வாவா 
ஐங்கரத்தோனுடன் ஐயம் தீர்க்க வாவா 
ஒப்பில்லாத வள்ளலே ஓர்நிலை உணர்த்த வாவா 
ஓம்காரப்பிரணவநாதா ஷண்முகா நீ வாவா 
ஔவைக்கு அருளிய ஔடதமே நீ வாவா 
கந்தா நீ வா வா கார்த்திகேயா வா வா 

ஶ்ரீ ஆண்டாள் பொன் மலரடிகளே சரணம்

அழகு மிக்க வனம் அமைத்து அதில் மலரும் மலரை பறித்து  
அரங்கனுக்கு மாலைகட்டி அகம் மகிழ்ந்தார்  பெரியாழ்வார்
        மாலுக்கு மாலைகள் கட்டி மகத்தான பணி செய்து வந்த
        மஹானுக்கு மகளாய் துளசி வனத்தில் கிடைத்தால் பூதேவி
பொன்மலர் பூத்தது போல் பூ மகளை கண்ட ஆழ்வார்  
பூக்களோடு பூவாய் அணைத்து பூரித்து ஆனந்தம் கொண்டார்
        நித்தமும் தான் வணங்கும் வித்தகனாம் அந்த ரங்கன் 
        சித்தம் மகிழ்ந்து தனக்களித்த வித்தையை நினைந்து  மகிழ்ந்து
கோடிசூர்ய பிரகாசமுடன் ஆடிப்பூரத்தில் பிறந்தபெண்ணிற்கு
கோதை என்று பெயர் சூட்டி ஆடிப்பாடி களித்தாராம்
        குழந்தைகோதை குமரி ஆகி குடம் குடமாய் தண்ணீர் ஊற்றி 
        குலுங்கிய மலர்களை பறித்து  ரங்கனுக்கு மாலை கட்டி மகிழ
ஆழ்வாரின் இல்லம் வரும் அடியார்கள் அனைவரும் 
அந்த ரங்கன் புகழ் பாடக்கேட்டு ஆனந்தம் மிக அடைந்தாள்
        மணப்பருவம் அடைந்த மங்கை மாயனான அந்த ரங்கனை
        மனாளனாய் தனக்கு வரித்துக் மனதில் கனவு பலவும் கண்டாள்
காதில் குண்டலம் மினுமினுக்க கழுத்தாரமும் கை வளைகளும் பளபளக்க 
நீலவண்ண சிற்றாடை கட்டி நெற்றியில் நீண்ட திலகமும் இட்டு 
        இடது பக்க கொண்டையில் விதவிதமாய் பூக்களை சுற்றி 
        இன்பமுடன் கண்ணாடியில் தன் முகத்தை யே பார்த்து ரசித்தே
அரங்கனின் மாலைகளை ஆவலுடன் பார்த்த கோதை - தான் 
அணிந்து பார்க்க ஆசை கொண்டு அரங்கனையே மனதில் நினைந்து
        மல்லிகைமாலை எடுத்தணிந்தாள் அதில் மஹாவிஷ்ணு முறுவலித்தார்
        மட்டற்ற மகிழ்ச்சி கொண்டாள் மனதிற்குள் சிரித்துக்கொண்டாள்
ரோஜாமாலை எடுத்தணிந்தாள் அதில் ரங்கராஜன் தோன்றி கண் சிமிட்ட 
சாமந்திமாலையில் பார்த்தசாரதி  புன்னகைத்தார்
        கோபாலனை ஆளவே அவள் கோபிகையாய் தானும்மாறி
        மார்கழி நோன்பிருந்து மாயவனை வழி பட்டாள்
என்றென்றும் தன்னுடன் அந்த ரங்கனையே அவள்கண்டாள் 
பாவை அவள் பூ மாலையுடன் திருப்பாமாலையும் தொடுத்தளித்தாள்
        அனந்தனை ஆட்கொண்டாள். ஆண்டாள் எனப்பெயர் பெற்றாள்
        ஆடிப்பூரத்தில் பிறந்த அந்த சூடிக்கொடுத்த சுடர்கொடி
சூடிக்கொடுத்தசுடர்கொடி அவள் சூடிக்கொடுத்தசுடர்கொடி
கோதை நாச்சியார் பொன் மலரடிகளே சரணம்!

Thursday, August 29, 2013

மங்களம்

ஆடல் அரசனுக்கு ஜெய மங்களம் அந்த அம்பலவாணனுக்கு சுப மங்களம்             

தேவர்முனிவர்பணியும் தியாகேசனுக்கு தேவி மீனாட்ஷியைமணந்த சுந்தரேசனுக்கு
ஆடல் அரசனுக்கு ஜெயமங்களம் அந்த அம்பலவாணனுக்கு சுப மங்களம்

கனகசபையில் ஆடும்நடராஜனுக்கு காமாட்ஷிநேயன் ஏகாம்ரேசனுக்கு
ஆடல் அரசனுக்கு ஜெயமங்களம் அந்த அம்பலவாணனுக்கு சுபமங்களம்

ஜெயமங்களம் நித்ய சுப மங்களம் ஜெயமங்களம் நித்ய சுபமங்களம்   

அஞ்சனா புத்ரன்

அஞ்சனாபுத்ரா சுந்தரரூபா ஆஞ்சனேயா நமோநமோ                                                  
வாயுகுமாரா வானரவீரா வரப்பிரசாதீ  நமோநமோ                                                              
ராமதூதா சீதாசகாயா ரகுபதிபிரியா நமோமோ                                                      
அஞ்சனாபுத்ரா சுந்தரரூபா ஆஞ்சனேயா நமோநமோ                                                    
வஜ்ரதேகா இலங்காதகனா விஸ்வரூபா நமோநமோ                                                        
பராக்கிரமா சிரஞ்சீவீ பரதசகாயா நமோநமோ                                                          
அஞ்சனாபுத்ரா சுந்தரரூபா ஆஞ்சனேயா நமோநமோ                                          
ஆஞ்சனேயா நமோநமோ  ஆஞ்சனேயா நமோநமோ

கண்ணனுடன் கோலாட்டம் ஆடுவோம்

கும்மியடித்து குதூகலித்தே நாமும் கோலாட்டமாடியே கொண்டாடுவோம்             

கண்ணனை போற்றுவோம் ஆனந்தமாய் நம் கண்ணனைபோற்றுவம் ஆனந்தமாய்          
அகிலத்தை ஆண்டிடும் மோகனரூபனை ஆயனைப்போல்வந்த கோவிந்தனை        
மண்ணை அள்ளித்தின்ற மாயவனை உறி வெண்ணை திருடி உண்டபாலகனை            
கும்மி அடித்து குதூகலித்தேநாமும் கோலாட்டமாடியே கொண்டாடுவோம்              

கண்ணனை போற்றுவோம் ஆனந்தமாய் நம் கண்ணனைபோற்றுவோம் ஆனந்தமாய்  
காளிங்கன்மேல்நடம் செய்தவனை பல கன்னியர் உடைகளை மறைத்தவனை    
வண்ணக்குழல் ஊதும் மேகநிறத்தானை எண்ணிலடங்கா வித்தைகள் செய்தவனை      
கும்மியடித்து குதூகலித்தேநாமும் கோலாட்டமாடியே கொண்டாடுவோம்        

கண்ணனை போற்றுவோம் ஆனந்தமாய் நம் கண்ணனை போற்றுவோம் ஆனந்தமாய்      
நம் கண்ணனை போற்றுவோம் ஆனந்தமாய் நம் கண்ணனை போற்றுவோம் ஆனந்தமாய்

Friday, March 15, 2013

பூமிநீளா சமேத கல்யாணவரதன்

கலியுகதெய்வமாய் கல்யாணவரதன்
 காட்க்ஷி அளிப்பது மஹாதேவியில்                      
கல்யாணமஹாதேவியில் 
நம் கல்யாணமஹாதேவியில்        

திருமுகபொலிவும் மலர்ந்த கண்களுமாய்
திவ்ய தரிசனம்தரும் வேங்கடவரதன்  
(கலியுகதெய்வமாய் ...)
               
பாண்டவஆறும் பல சோலைகளும் நிறைந்து
பாங்காய் அமைந்த பொற்கோயில்தனிலே  
ஈடில்லா அழகுடைய பூமிநீளா சமேதரராய்
நாடி வருவோர்க்கு பலநன்மைகள்செய்திட  
(கலியுக தெய்வமாய் ...)

Monday, August 27, 2012

குருவாயூர்தனில் நின்றே பாலகிருஷ்ணன்



குருவாயூர்தனில் நின்றே பாலகிருஷ்ணன்
குறையின்றி நமை காப்பான் பாலகிருஷ்ணன் 
கோகுலத்தில் வளர்ந்தவனாம் பாலகிருஷ்ணன்
கோலமயில் சிறகணிந்த பாலகிருஷ்ணன்
கோடிசூர்ய பிரகாசனாய் பாலகிருஷ்ணன்
கோலாகலமாய் காட்ஷி அளிக்கும் பாலகிருஷ்ணன்
குருவாயூர்தனில் நின்றே பாலகிருஷ்ணன் 
குறையின்றி நமை காப்பான் பாலகிருஷ்ணன் 
கோமாதாவை மேய்த்தவனாம் பாலகிருஷ்ணன் 
கோவர்தனம் தூக்கி காத்த பாலகிருஷ்ணன் 
கோபியரின் நேயனாம் அந்த பாலகிருஷ்ணன் 
கோதை மனாளனான பாலகிருஷ்ணன் 
குருவாயூர்தனில் நின்றே பாலகிருஷ்ணன் 
குறையின்றி நமை காப்பான் பாலகிருஷ்ணன் 
பாலகிருஷ்ணன் 
எங்கள் கோபாலகிருஷ்ணன் 
எங்கள் கோபாலகிருஷ்ணன்

Friday, July 13, 2012

தீபமங்கள ஜோதியே ஶ்ரீலக்ஷ்மி



தீபமங்கள ஜோதியே ஶ்ரீலக்ஷ்மி திருமால் மார்பில் உறையும் தேவி 
துதி செய்தோர்க்கு உன்னை துதி செய்தோர்க்கு துயர் பிணிபோக்கிடும் தாயே  
தீபமங்கள ஜோதியே  ...
அஷ்ட ஐஸ்வர்யம் அளித்து என்றும் அருள்வழி தனில் எமை நடத்தியே 
நித்தமும் எம்மோடு  நிலைத்து நின்றே  நிறைவான வாழ்வை எமக்களிப்பாயே  
தீபமங்கள ஜோதியே ...

பாஹி பாஹி நரஸிம்மா

பாஹி பாஹி நரஸிம்மா
பக்தபரிபாலா நரஸிம்மா

பிரகலாதவரதா நரஸிம்மா
பதிதபாவன நரஸிம்மா

சிம்மரூபா நரஸிம்மா
சங்கடஹரணா நரஸிம்மா

கமலநாபா நரஸிம்மா
கருடவாஹன நரஸிம்மா

நரஸிம்மா ஹரி நரஸிம்மா 
 நரஸிம்மா லஷ்மி நரஸிம்மா 
 நரஸிம்மா லஷ்மி நரஸிம்மா

Thursday, July 12, 2012

ரகுகுல ராமா


ராமாராமா ரகுகுல ராமா ஹே
தசரதகுமாரா ஹே தீனபந்தோ
பக்தபரிபாலா பரமதயாளா ஹே
கோசலபுத்ரா ஹே கோதண்டராமா
மாருதிசேவித மன்மதரூபா ஹே
ஜானகிநாயகா ஹே சாந்தசீலா
தசமுகமர்த்தன தசஅவதாரா
ஹே தீனபந்தோ ஹே தீனபந்தோ ஹே தீனபந்தோ

சரணம் கணேசா





சம்புகுமாரா சரணம் கணேசா ஜெய 
சங்கரிபாலா சரணம் கணேசா 
மூலாதார சரணம் கணேசா 
மூஷிகவாகனா சரணம் கணேசா 
ஏகதந்தா சரணம் கணேசா 
லம்போதரா சரணம் கணேசா 
சம்புகுமாரா சரணம் கணேசா ஜெய 
சங்கரிபாலா சரணம் கணேசா 


கஜவதனா சரணம் கணேசா 
கருணாசாகரா சரணம் கணேசா 
வக்ரதுண்டா சரணம் கணேசா 
வரப்பிரஸாதி சரணம் கணேசா 
சம்புகுமாரா சரணம் கணேசா ஜெய 


சங்கரிபாலா சரணம் கணேசா சங்கரிபாலா சரணம் கணேசா சங்கரிபாலா சரணம் கணேசா

என் அருமை செல்வனே கண்ணா





என் அருமை செல்வனே இன்னமுதே கண்ணா நீ 
வெண்ணெய் திருட சென்றாயோ வேரெங்குசென்றாயோ 


வெண்ணெய் திருடி தின்னும் இன்பம் வேரெதிலும் இல்லை அம்மா 
என்னை என்ன செய்யுமுடியும் எப்படியும் நான் தப்பிடுவேன் 


கண்மணி நான் உனக்கு கை நிறைய வெண்ணெய் தருவேன் 
ஏன் இந்த பொல்லாப்பு யாரிடம் நான் முறையிடுவேன் 


நீ கொடுக்கும் வெண்ணெய் எனக்கு தேனாய் இனிக்கும் அம்மா 
நான் திருடி தின்னும் வெண்ணெயில் மர்மம் பல இருக்குதம்மா 


அடுத்தவீட்டு ஆய்ச்சியிடம் அடிவாங்கி வந்தாயோ நீ 
பக்கத்து வீட்டு பாட்டியின் பழிச்சொல்லை கேட்டாயோ 


அடிவாங்க நான் என்ன அறியாதவனா அம்மா 
தடி எடுக்குமுன் தானும் ஓடி ஒளிந்திடுவேன் தாயே 


பேதை நான் என்ன செய்வேன் பெற்றமனம் பதைபதைக்க 
காதை பொற்றி கொண்டு நானும் எத்தனை நாள் இருந்திடுவேன் 


ஏன் இந்த கவலை அம்மா என்னை உனக்கு தெரியாதா 
நான்தான் அந்த கள்வன் என்று நாலு பேரிடம் எடுத்து சொல்வேன்

என் அருமை செல்வனே இன்னமுதே கண்ணா நீ 
வெண்ணெய் திருட சென்றாயோ வேரெங்குசென்றாயோ