Thursday, January 16, 2014

கண்ணன் வெண்ணெய் திருடிய ரகஸியம்

கண்ணா நீ வெண்ணெய் திருடிய ரகஸியத்தை எனக்குமட்டும் சொல்வாயா அப்பா!

  • அரக்கியிடம் பால் அருந்தியதால் உன் அதரங்கள் சிவந்ததே அதற்கு மருந்திடவா
  • மண்ணை தின்று வாயில் புண் ஏற்பட்டதால் வெண்ணெய் திருடி உண்டாயா.
  • யஸோதை கட்டிய கயிற்றால் உன் இடையில் ஏற்பட்ட புண்ணில் தடவுவதற்கா.
  • ஆனிரை மேய்க்க சென்றதில் கால் நொந்து அதற்கு வெண்ணெய் தடவினாயா.
  • கோவர்த்தன மலையை தூக்கியதால் உன் பிஞ்சு விரலில் பட்ட காயத்திற்கு மருந்திடவா.
  • குழலெடுத்து இசை இசைத்ததில் உன்கொவ்வைசெவ்வாய் கொப்பளித்து அதில் பூசவா.

    
இல்லை கண்ணா இல்லை. நானே அந்த ரகஸியத்தை கூறிவிடவா கண்ணா. உன் அழகிய பொன்மேனியை மேலும் மெருகூட்டி ராதையின் மனதில் இடம் பெருவதற்கு தானே நீ வெண்ணெயைத் திருடி உண்டாய்! மாயக்கண்ணனே!

ரயில் பயணம்

          சுமார் ஐம்பதுவருடங்களுக்குமுன் 1961ல் நடந்த சம்பவம். அப்பொழுதுதான் எனக்கு கல்யாணம் ஆகி நானும் என் கணவரும் சென்னையிலிருந்து  டில்லிக்கு பயணம் செய்தோம். எனக்கு அப்பொழுது வயது பதினாறு. அதற்குமுன் நான் சென்னையைத்தாண்டி எங்குமே சென்றதில்லை. வேறு எந்த மொழியும் எனக்குத்தெரியாது (தமிழ் தவிர). டில்லியில்தான் என் கணவருக்கு வேலை.
          நாங்கள் சென்னை சென்ரலில் டீலக்ஸ் ஏர்கண்டிஷன் ரயிலில் ஏறி உட்கார்ந்தோம். எனக்கு அதுவே மிகவும் திரில்லிங்காக இருந்தது. எங்களை வழி அனுப்ப வந்த உறவினர்கள் மற்றும் சினேகிதர்களுடன் என் கணவர் கீழே நின்று பேசிக்கொண்டிருந்தார். நான்பேசுவது வெளியே இருப்பவர்களுக்கு கேட்காது என்று தெரியாமல் நானும் ஏதோ பேசினேன். பிறகு தான் நான் பேசுவது எதுவும் அவர்களுக்கு கேட்காது என்பதை கணவர் மூலம் தெரிந்து கொண்டேன். ஒருவழியாக ரயிலும் கிளம்பியது.
           மறுநாள் காலை காசிப்பட் ஸ்டேஷனில் ரயில் நின்றவுடன் என் கணவர் கீழே இறங்கி பேப்பர் வாங்கி வருகிறேன் பத்திரமாக இரு  என்று கூறிவிட்டு இறங்கினார். நானும் வெளியே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன்.
            ரயில் சற்று நேரத்தில் கிளம்பி விட்டது. பேப்பர் வாங்க போன என் கணவர் வரவில்லை. எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. அழுது கொண்டே ஶ்ரீராமஜயம் சொல்லிக்கொண்டிருந்தேன். எதிர் சீட்டில் இரண்டு சர்தார்ஜிகள் உட்கார்ந்திருந்தார்கள். நான் சர்தார்ஜிக்களையே பார்த்ததில்லை. அவர்களை பார்த்து எனக்கு மேலும் பயம். நல்லவேளை பின்சீட்டில் தமிழ் பேசும் மாமா மாமி எங்களுடன் பயணம் செய்தார்கள். அவர்கள் என்னிடம் வந்து ஏன் அழுகிறாய் என்ன ஆச்சு என்று கேட்டார்கள்.
        நானும் என் கணவர் கீழே இறங்கியதையும் ரயில் கிளம்பியும் அவர் வரவில்லையே எனக்கு பயமாக இருக்கிறது என்று கூறிவிட்டு அழுது விட்டேன். அதற்கு அவர்கள் பயப்படாதே அவர் ரயிலைத்தவற விட்டிருப்பார் அடுத்த ரயிலில் வந்து விடுவார் என்றும்  டில்லியில் உங்களை வரவேற்பதற்கு யாராவது வருவார்களா  என்றும் கேட்டார்கள்.  ஸ்டேஷனுக்கு என் மைத்துணர்கள் வருவார்கள் ஆனால் எனக்கு யாரையுமே சரியாக அடையாளம் கண்டுபிடிக்க முடியாது கல்யாணத்தன்று பார்த்தது என்று சொன்னேன். நாங்கள்அவர்களை கண்டுபிடித்து உன்னை அவர்களிடம் விட்டுவிடுகிறோம் அழாதே என்று சொன்னார்கள். என்ன செய்வது என்று தெரியாமல் அவர் என்னை ஏமாற்றி விட்டு போய் விட்டாரோ என்று நினைத்து அழுது கொண்டிருந்தேன்.
           அடுத்த ஸ்டேஷன் வந்தவுடன் கீழே இறங்கி விடுவது என்று முடிவு செய்தேன். அரைமணி நேரம் அப்படியே ஶ்ரீராமஜயம் சொல்லிக்கொண்டும் மேலே என்ன செய்வது என்று யோஜித்துக்கொண்டும் உட்கார்ந்திருந்தேன்.  என்ன யோஜனை என்று கேட்டுக்கொண்டே என் கணவர் என் தோளை தட்டினார். எனக்கோ என்ன சொல்வது என்று தெரியவில்லை. இன்னும்வேகமாக அழ ஆரம்பித்து விட்டேன். பின் சீட்டில் இருந்த மாமா என்ன ஆயிற்று சார் ஏன் இத்தனை நேரம் நீங்கள் வருவதற்கு உங்கள் மனைவி பயந்துவிட்டார் என்றார்.
           என் கணவர் நடந்ததை கூறினார். ரயில் கிளம்பியதும் அவர் அடுத்த கம்பார்ட்மெண்டில் ஏறி வந்து கொண்டிருந்தாராம் அங்கு அவருடைய பழைய சினேகிதர் ஒருவரை பார்த்துவிட்டார் அவருடன் பேசிக்கொண்டிருந்ததில் நான் தனியாக உட்கார்ந்திருப்பதை மறந்து விட்டாராம். சிறிது நேரத்தில் ஞாபகம் வந்தவுடன் வந்துவிட்டேன்என்று சர்வ சாதாரணமாகச்சொன்னார். எனக்கோ அப்பொழுது தான் வேறொரு கம்பார்ட்மென்டிலிருந்து வெச்டிபுல் வழியாக இங்கு வரமுடியும் என்பதே தெரியும்.     அந்த அனுபவத்தைநினைத்தால் இப்பவும் எனக்கு நான் கீழே இறங்கி இருந்தால் என்ன ஆகி இருக்குமோ என்று தோன்றும்.
             ஒன்று சொல்ல மறந்து விட்டேனே. இதில் வேடிக்கை என்ன என்றால் நான் என்னை அறியாமல் ஶ்ரீராமஜயம் சொல்லிக்கொண்டிருந்தேன் என் கணவரின் பெயரும் ஶ்ரீராமன்.
           

மீண்டும் வரங்கள்

      ஆம், அண்ணல் ராமன் பதினான்கு வருட வனவாசம் முடிந்து வெற்றியுடன் புஷ்பகவிமானத்தில் வந்திறங்கிய நன்நாள் தான் அது. உதயசூரியன் ஆவலுடன் எட்டிப்பார்க்க சூரியகுல திலகத்தை சுமந்து வந்த புஷ்பகவிமானம் கீழே இறங்கியது.
       பரதனை விழுங்க தயாராக நின்ற தீக்கனல்கள் சுருண்டன. அண்ணனின் பாதகமலத்தில் தலைவைத்து ஆனந்தக்கண்ணீர் விட்டான் பரதன். மங்கலவாத்தியங்கள் முழங்கின. மக்கள் மகிழ்ச்சியுடனும், ஆரவாரமுடனும் "ரகுராமன்வாழ்க! வெற்றிவீரன்வாழ்க!" என்றுகூவி மகிழ்ந்தனர். பரதனை தூக்கி அணைத்த ராமன் தாயார்களை நோக்கி நடந்தான். மகிழ்ச்சியில் யாவரும் திளைத்தனர். சட்டென கைகேயியின் காலில் விழுந்து வணங்கினான் ராமன். தாயே தாங்கள் சொன்ன சொல்லை காப்பாற்றி விட்டேன் ஆசி கூறுங்கள் என்றான்.
         கலங்கிய முகத்துடன் வார்த்தை எழாமல் நின்ற கைகேயியைப் பார்த்துதுணுக்குற்றான்.
தாயே, ஏன் கண்கள் கலங்குகிறீர்கள். தாங்கள் நினைத்த காரியத்தால் தசமுகனை வென்று வந்திருக்கிறேனே. எதற்காக வருத்தப்படுகிறீர்கள்?
           ராமா! என் மகனே! என்று உதடு துடிக்க கூறிவிட்டு மயங்கிவிழுந்தாள் கைகேயி. ஊர்மிளை ஓடிவந்து தாங்க, சுதகீர்த்தியும் மாண்டவியும் முகத்தில் நீர் தெளித்தனர். தன் மேலாடையால் அன்னையின் முகத்தை துடைத்தான் ராமன். கைகேயியின் கண்களிலிருந்து கண்ணீர். "வனவாசம் போயும் திரும்பி வந்துவிட்டானே என கண்ணீரவடிக்கிறாளா - இவளா என்னை பெற்ற தாய் - இல்லை இவள் ஒரு பேய்," பரதன் கருவினான். அம்மா எழுந்திருங்கள் என்ற ராமன், அவளை அன்புடன் அணைத்து, அங்கு காத்திருந்த ரதம் நோக்கி சென்றான்.
            "நான் பெற்ற மகனே என்னை நாகூசாமல் ஏசுகிறான், ஆனால் நீயோஎன்னிடம் அன்பை பொழிகிறாய். ஒரு கூனியின் சொல் கேட்டதால் நான் பட்ட துன்பங்கள் என்னை கூனிக்குருக வைத்து விட்டது. போதும்ப்பா எனக்கு. உனக்காக நான் உயிர் வாழ்ந்தேன்," வேதனையுடன் கூறினாள் கைகேயி.
            "யார் சொன்னது நீங்கள் கூனிக்குருகியதாக? பார் போற்றும் வெற்றியை எனக்கு அளித்ததே நீங்கள் தானே அம்மா. வெற்றிக்கு மூலமே நீங்கள். தூற்றுபவர்களை மன்னித்து விடுங்கள்". கைகேயியின் முகத்தில் புன்னகையின் சாயல். தாயே அரண்மணை செல்ல உத்தரவு இடுங்கள். திகைப்புடன் கைகேயி "நானா? உன்னைப்பெற்ற உத்தமி கௌசல்யா அவர்கள் கூறட்டும் ராமா" என்றாள் அமைதியாக. "நான் ராமனை ஈன்றவள் மட்டுமே, நீதான் அவனுக்கு பெருமைகளை அளித்தவள் உனக்குத்தான் உரிமை உண்டு கைகேயி," என்றாள் கௌசல்யா.
           கைகேயி களிப்புடன் ராமனும், சீதையும் அயோத்திசெல்லும்படி கூறுகிறேன் மங்கல வாத்தியங்கள் முழங்கட்டும் என்று உத்தரவிட்டாள். வசிஷ்டரும், சுமந்திரரும் அதை ஆமோதித்தனர். ரதத்தின் அருகில் வந்த கைகேயி அங்கேயே நின்றாள்.
            ராமன் அன்னையின் முகத்தை நோக்கி ஏருங்கள் என்றான். அதற்கு கைகேயி முன்பு உன் தந்தையுடன் தேரில் சென்ற பொழுது இரு வரங்கள் கேட்டேன் அல்லவா? இப்பொழுது இத்தேரில் அமருமுன் எனக்கு இரண்டு வரங்கள் வேண்டும் மகனே என்றாள்.
          மீண்டும் இரண்டு வரங்களை? பரதன் கோபமுடன் பாய்ந்து வந்தான். ஆத்திரம் வீரனுக்கு அழகல்ல, அவனை கையமர்த்திவிட்டு கைகேயியை வாஞ்சையுடன் பார்த்த ராமன் கேளுங்கள் அம்மா என்றான்.
         "திருமாலின் அவதாரமே! எனக்கு இப்பிறவியில் பழிச்சொற்களையும், பாவங்களையும் ஏற்றுக்கொள்ளும்படி செய்தாய். இதற்கு நேர்மாறாக உன் அடுத்த அவதாரத்தில் உன்னையே வளர்த்து உலகம் புகழும் தாயாக வாழ வரம்தா. இரண்டாவது, தசரதமன்னனே என் அடுத்த பிறவியிலும் எனக்குமட்டுமே கணவராக வந்து என் கடைசி மூச்சை அவர்மடியில் விடும் பாக்கியத்தைதா", குரல் தழுதழுக்க கூறி முடித்தாள் கைகேயி. எப்படிப்பட்ட அற்புதமான வரங்கள்! வசிஷ்டர் வியந்தார். பரதன் அம்மா என்று கூவிக்கொண்டே புளகாங்கிதமுடன் அவள் காலடியை பற்றி வணங்கி, உங்களை நினைத்து நான் பெருமைபடுகிறேன் என்றான்.
          ராமனுக்கோ கிருஷ்ணாவதாரத்தில் வரப்போகும் யஸோதையும், நந்தகோபரும் கண்முன் தோன்றினார்கள். கைகேயி தன்னை வளர்க்கும் அன்னையாய் மட்டுமே வந்து உலகம் புகழும்படி இருக்கப்போவதை நினைத்துக் கொண்டார்.
      எப்பொழுதோஇக்கதையை நான் படித்துரஸித்திருக்கிறேன். சில இடங்களில் சிலவற்றை மாற்றி எழுதி வலைப்பூவில் பதிவு செய்திருக்கிறேன்.


Thursday, January 9, 2014

குருவாயூரப்பனே குறை தீர்க்கும்வள்ளலே

குருவாயூரப்பனே குறை தீர்க்கும்வள்ளலே
உன் திருமேனி அழகில்நான் மெய்மறந்தேனப்பா 
       நிர்மால்ய தரிசனம் நிறைவாக நான்கண்டேன் 
       தர்மபிரபுவே உன்னை தண்டனிட்டேனப்பா 
கோடிஜன்ம பாபம்தீர உன் திவ்யநாமம் சொல்லியே 
குழலூதும் கிருஷ்ணா நான் சீவேலிசுற்றி வந்தேன் 
       தீராவினை தீர்த்து வைக்கும் கிரிதர கோபாலா 
       பாராமுகம் ஏன் அப்பா பாவி என்தன்மேல் 

ராமாயணத்தில் சுமத்திரை

அவதரித்தார்கள் ரகுகுல பாலன்கள் 
ஆனந்தத்தில் மூழ்கியது அயோத்தி நகரமே! 
தந்தை தசரதர் தானங்கள் பல கொடுக்க 
தாயார்கள் மூவரும் இன்பத்தில் திளைத்திருக்க

கன்னியர் யாவரும் களிப்புடன் கீதம்பாட 
காளயரெல்லாம் மங்கள வாத்யம் இசைக்க
தேவர்களும் மாமுனிவர்களும் பூமாரிபொழிய 
தேவலோகமாய் அயோத்தி காட்ஷி அளிக்க

குலகுரு வசிஷ்டரும் கோலாகலமுடன் வந்து 
குழந்தைகளை மிக்க பெருமையுடன் பார்த்து
ராம-பரத-லஷ்மண-சத்ருக்ண என்று  
நாமம் சூட்டியே அன்புடன் ஆசிர்வதிக்க

அவதரித்தார்கள் ரகுகுல பாலன்கள் 
ஆனந்தத்தில் மூழ்கியது அயோத்தி நகரமே!

ராமாயணத்தில் சுமித்திரை

     ராமாயணத்தில் அதிகம் பேசப்படாதவள் சுமித்திரை. ராமனை பெற்றதால் கோசலைக்கு பெருமை. அந்த ராமனை காட்டிற்கு விரட்டியதால் பிரபலம் அடைந்தாள் கைகேயி. ஆனால் சுமித்திரை அவர்களைப்போல் முக்கியத்துவம் பெறாவிட்டாலும் தன்பெயருக்கு ஏற்றபடி விளங்கியவள். சுமித்திரை என்றால் நல்ல அறிவும் குணமும் உடையவள் என்று அர்த்தம். இத்தகைய பண்புடையவள் ராமாயணத்தில்  கவனிக்கப்படாதவளாகத்தான்  இருந்திருக்கிறார். அப்படியும் அவள் தன் நற்பண்புகளை விட்டுக்கொடுக்கவில்லை.
     இம்மூவருக்கும் பொதுவாக ஓர்ஏக்கம் இருந்தது. ரகுகுலம் தழைக்க தங்களால் ஓர்வாரிசை தரமுடியவில்லையே என்பதுதான் அது. வசிஷ்டர் போன்ற  மகாரிஷிகளும் ஜோசியர்களும் கலந்து ஆலோஜித்து ஓர் முடிவுக்கு வந்தார்கள். புத்திரகாமேஷ்டி யாகம் செய்வது என்று. தசரதரும் இதற்கு இணங்க, யாகம் விமரிசையாக  நடத்தப்பட்டது. மனைவியர் மூவரும் கலந்து கொண்டார்கள்.
     தனக்கு மூன்றாவது இடம்தானே என்று நினைத்தாளோ தெரியவில்லை சுமித்திரை, சற்றே ஒதுங்கி நின்றிறுந்தாள். தசரதன் ஆர்வத்துடனும் மிக்க ஈடுபாடுடனும் செய்த யாகம்  அல்லவா இது. அதற்கு நல்ல பலன் கிடைத்தது. யாகம் முடிவடைந்தபொழுது யாகத் தீயிலிருந்து ஓர்தேவதை ஒரு குவளை பாயசத்தைக் கொடுத்தாள். அதை வினயமாகப்பெற்று கொண்ட தசரதன், தன் மனைவியரைப் பார்த்தான். ஆமாம் பாயசக்குவளைகளை ஏந்திவந்த தசரதன், கோசலை கைகேயியிடம் மட்டும் இரு பொற்கிண்ணங்களில் சரிசம மாக ஊற்றி அந்தப்பாயசத்தை கொடுத்துவிட்டு சென்றுவிட்டார். ஒதுங்கி நின்ற சுமித்திரையை அவர் கவனிக்கவில்லையோ. 
     சுமித்திரையின் கண்களில் ஏக்கம் பொங்கினாலும் மனம் மட்டும் பதற்றத்தை தணித்துக்கொள்ள முயன்றது. மனைவி என்ற அந்தஸ்து கிடைத்தும் தாய் என்ற கௌரவம் தனக்கு கிட்டாமல் போய்விடுமோ பரவாயில்லை, தாதி பொறுப்பாவது கட்டாயம் தனக்கு கிட்டும் என்று ஆறுதல் கொண்டாள். கோசலைக்கும், கைகேயியிக்கும் பிறக்கும் குழந்தைகளை சீராட்டி, தாலாட்டி, வளர்க்கும் பொறுப்பு தனக்கு கிடைக்காமலாபோய் விடும் என்று நினைத்து ஆறுதல் அடைந்தாள். மன்னனாகிய கணவனே தன்னை புறக்கணித்துவிட்ட பிறகு மூத்தாள்களும் மன்னனினின் வழியை பின்பற்றினால், சற்றே சோர்ந்து போனாள்சுமத்திரை. சிறிது கண்மூடி தூணில் சாய்ந்து உட்கார்ந்திருந்தவள், தன்னை யாரோதொட்டு அழைப்பதை உணர்ந்தாள் - கோசலை பின்னால் கைகேயி.
     "என்ன சுமித்திரை, ஏன் ஒதுங்கி நிற்கிறாய்", என்று கைகேயி கேட்டாள். "ஒதுங்கவில்லையே
நீங்கள் இருவரும் இருக்கும் பொழுது நான் முன்வந்து நின்றால் அதிகப்பிரசங்கித்தனம் ஆகாதா", சுமித்திரை தன்உணர்வுகளை அடக்கிக்கொண்டு வினயமாக பதிலளித்தாள். "அதெப்படி உனக்கும் சமவுரிமை இருக்கிறதே, மன்னர் உனக்கு உறிய பங்கைகொடுக்கச்சொல்லி சென்று விட்டார்" என்று சொன்ன கோசலை, சுமித்திரையின் கையை பிரியமுடன் பற்றி தன்பங்கை பாதியாக பகிர்ந்து சுமித்திரையிடம் பாதியை கொடுத்தாள். கோசலையின் பாச உள்ளத்தை அறிந்து கொண்டாள் சுமித்திரை. கணவரை விட்டுக்கொடுக்காத, அதே சமயம் தனக்கும்  ஆதரவாகப்பேசும் உயர்உள்ளம் எத்தனை பேருக்கு வரும்?  இவளுக்கு பிறக்கும் குழந்தை  நிச்சயமாக தர்மவானாகவும், நல்ல பண்புள்ளவனாகவும் தான் இருப்பான் என்று நினைத்துக்கொண்டாள்.
     கைகேயி சுமித்திரையிடம் வந்தாள். "உனக்கு அக்காள் இல்லாத குறையை இவர்கள் தீர்ப்பார்கள் என்று சொல்லித்தானே எங்களுக்கு உன்னை அறிமுகம் செய்துவைத்தார் மன்னர் தசரதர். அதனால் உனக்கும் சமவுரிமை எல்லாவற்றிலும் உண்டு. அது எங்கள் கடமையுமாகும். இந்தா என்பங்கிலிருந்து பாதியைதருகிறேன் வாங்கிக்கொள்" என்றாள் கைகேயி அன்புடன்.  நெகிழ்ந்து போன சுமித்திரை தன்மீது இவ்வளவு பரிவு காட்டும் கைகேயிக்கு பிறக்கும் பிள்ளையும் தனக்கென எதுவும் வேண்டாத நல்ல குணவானாக விளங்க மானசீகமாக ஆசிர்வதித்தாள். கண்களில் நீர்கோர்க்க அவர்கள் கொடுத்த பாயசத்தை பருகினாள். நடுங்கும் கரங்களுடன்  மூவரும் ஒருவரை ஒருவர்  பாசத்துடன் அணைத்துக்கொண்டார்கள்.
     மாதங்கள் ஓடின. மூவரும் கருவுற்றார்கள். கோசலைக்கு இராமனும், கைகேயிக்கு பரதனும்,
சுமித்திரைக்கு லஷ்மண சத்ருக்கனும் பிறந்தார்கள். மன்னர்தசரதனும் பெரும் மகிழ்ச்சி அடைந்து குழந்தைகள் பிறந்த தினத்தை கோலாகலமாக கொண்டாட உத்தரவிட்டார். விழா எல்லாம் இனிதாக நடந்தேறியது. சுமித்திரை தன்குழந்தைகளை எடுத்து கொண்டுவந்து கோசலை கைகேயியின் முன் நின்றாள். இந்தக்குழந்தைகள் நீங்கள் எனக்கு அளித்த பிச்சை. இதோ இலஷ்மணன் இவன் உங்கள் இராமனுடன் உறுதுணையாக இருப்பான், ராமனின் நிழலாக தொடர்வான் - என்று கோசலையிடம் சொன்னாள். பிறகு கைகேயியிடம் திரும்பி, இந்த சத்ருக்கன் உங்கள் பரதனுடன் இணைந்தே வாழ்வான் என்றாள் தழுதழுத்த குரலில் அவர்கள் பொறுப்பில் தன் குழந்தைகளை விட்டு சுமித்திரை நிறைந்த மனதுடன் நின்றாள். என்ன ஓர் உத்தமமானகுணம் இந்த சுமித்திரைக்கு. 
     நான் எப்பொழுதோ படித்து ரஸித்ததை உங்களிடமும் பகிர்ந்த கொள்கிறேன். சில இடங்களில் மாற்றியும் எழுதி இருக்கிறேன்.