Thursday, July 12, 2012

எத்தனை இன்பங்களை

நீரும் நிலம் நெருப்பும் அதனுடன் வான் வாயுவும் இன்னும் பலவும் 
எமக்களித்து இன்னலற்ற வாழ்வையும் கொடுத்திட்ட 
தன்நிகரில்லாத இறைவா உத்தமா உன்தன்னை
நான் என்னவென்றுபுகழ்ந்துபாடிடுவேன் ஐயா 

எத்தனை எத்தனை இன்பங்களோ இவ்வையமதில் 
அத்தனையும் பேர் இன்பமயமே இறைவன் நமக்களித்த (எத்தனை)

ஆதவன் உதிப்பது தினம்தினம் இன்பம் அந்த 
அலைகடலும் மலையும் கண்டுகளிப்பது இன்பமே (எத்தனை)

பசுமையான பலமரங்களும் புல்லினமும் இன்பம் 
பரந்திருக்கும் இந்த பேருலகமும் இன்பமே (எத்தனை)

அழகாய் சிரிக்கும் மழலையின் குரல் இன்பம் 
அனுதினமும்மலரும் அந்த பூக்களும் இன்பமே (எத்தனை)

ஆவினங்கள் அசைந்து ஆடிவருவது இன்பம் 
ஆடிடும் மயில்களும் கூவிடும் குயிலினமும் இன்பமே (எத்தனை) 

வண்ணமயமாய் தோன்றும் வானவில்லும் இன்பம் 
வண்டினங்களின் அந்த ரீங்காரமும் இன்பமே (எத்தனை) 

மண்ணில் பேரின்பமுடன் நாம் வாழ்ந்திடவே 
எண்ணில் அடங்காத எத்தனை இன்பங்கள் 
இன்னும் பல இன்பங்களை எமக்களித்த இறைவா
என்றும் உன்னை பரவசமாய் பாடுதல் பேரின்பமே (எத்தனை)

No comments:

Post a Comment